விஜய்க்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அவரது அன்பு ரசிகர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சிக்கு விஜய் செல்வாரா தெரியாது. ஆனால் அந்த சிலையை நெஞ்சார தழுவி மனசார முத்தம் கொடுத்திருக்கிறார் விஜய். பட்…? ஒரு சொட்டு கண்ணீர் விட்டே ஆக வேண்டும். ‘இந்த சிலையை செய்த அந்த சிற்பி எங்கிருந்தாலும் மேடைக்கு வராமல் அப்படியே ஓடிவிடவும்…’ என்று அறிவித்தால் கூட தேவலாம்.
ரசிகர்களின் அன்பு காரணமாக இந்த சிலை உருவாக்கப்பட்டிருப்பதால், அந்த சிலையை விமர்சனம் செய்வது உத்தமம் அல்ல. சிலையின் மதிப்பு சுமார் ஒரு லட்சமாம். இந்த விஷயத்திற்கு விஜய் எப்படி ஒப்புக் கொண்டார் என்பது பெரிய கேள்வி. ஏனென்றால் இப்போது இருக்கும் ரசாபசமான சூழலில் இந்த சிலைக்கு பாதுகாப்பு இருக்குமா? அந்த சிலையை யாராவது விஷமிகள் தொட்டால், அதற்கப்புறம் நடக்கிற சட்டம் ஒழுங்கு பிரச்சனை எங்கு போய் முடியும்? இதனால் யார் யாருக்கெல்லாம் சங்கடம் என்ற அடுத்தடுத்த சந்தேகங்கள் நடுநிலை ரசிகர்களை கவலை கொள்ள வைத்திருக்கிறது.
அஜீத் ரசிகர்கள் ‘நாங்களும் சிலை வைக்கிறோம்’ என்று கிளம்பினால் என்னாவது? வருமுன் காப்பதே மேல் என்பதை உணர்ந்து சம்பந்தப்பட்ட இரண்டு ஹீரோக்களுமே இந்த விஷயத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதுதான் நடுநிலையாளர்களின் எண்ணம்.