இருவருக்கும் சினிமா நட்புதான். ஆனால் அந்த சினிமாவையும் தாண்டிய நட்பு விஜயகாந்துக்கும் விஜய் அப்பா எஸ்.ஏ.சிக்கும் உண்டு. ஒரு காலத்தில் விஜயகாந்தின் சில பல ஹிட்டுகள் எஸ்.ஏ.சியால் வந்ததை நாடறியும். வரலாறு அறியும். அந்த நன்றிக்கடனுக்காக விஜய்யின் வளர்ச்சிக்கு தன்னாலான உதவிகளையும் செய்தார் விஜயகாந்த். இன்று விஜய் மிகப்பெரிய இடத்திலிருந்தாலும், ஒரு காலத்தில் பி அண்டு சி என்று சொல்லப்படும் ஏரியாவுக்கு இவரை கை பிடித்து அழைத்துச் சென்றவர் விஜயகாந்த் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இப்போதும் இரண்டு குடும்பங்களுக்கு இடையே நல்ல புரிதலும் நட்பும் இருப்பதால்தான் அவ்வப்போது அரசியல் விஷயங்களை கூட இருவரும் பகிர்ந்து கொள்கிறார்கள். கட்…! விஷயத்திற்கு வந்துவிடுவோம். சமீபத்தில் எஸ்.ஏ.சிக்கு போன் அடித்த விஜயகாந்த், தன் மகன் சண்முக பாண்டியனின் சினிமா எதிர்காலம் குறித்து பலமாக விவாதித்தாராம். அப்போது ஃபாதர் ஆஃப் விஜய் சொன்ன ஒரு ஆலோசனை விரைவில் செயல்படுத்தப்பட்டாலும் ஆச்சர்யமில்லை. அது இதுதான்…
கடந்த சில மாதங்களாக சண்முக பாண்டியனின் இரண்டாவது படத்திற்காக கதை கேட்கும் படலம் நடந்து வருகிறதல்லவா? அந்த லிஸ்ட்டில் விஜய்யை வைத்து தமிழன் படத்தை இயக்கிய மஜீத்தும் இருக்கிறார். அது குறித்துதான் எஸ்.ஏ.சியிடம் ஆலோசனை கேட்டாராம் விஜயகாந்த். “அப்படியா, கண்டிப்பா அதில் நடிக்க சொல்லுங்க. அவர் எடுத்த படம் வேணும்னா ஓடாம இருந்திருக்கலாம். ஆனால் அந்த மஜீத் ரொம்ப ராசியான ஆளு. எப்போ அவர் இயக்கிய தமிழன் படத்தில் விஜய் தம்பி நடிச்சுதோ, அப்போதிலிருந்துதான் தம்பியின் சம்பளம் லட்சங்களில் இருந்து கோடியா உயர்ந்துச்சு” என்றாராம் எஸ்.ஏ.சி.
ஆகக்கூடி இறுதி முடிவு எடுத்தாச்சு! சண்முகப்பாண்டியனை இயக்கவிருக்கிறார் மஜீத்!
தமிழன்டா….