“ மோடி யோசித்திருக்கலாம்… ” விஜய்யின் துணிச்சல் மொமென்ட்!

கருத்து சொல்வதில் இருக்கிற கஷ்டம், கை வண்டி இழுப்பதில் கூட இல்லை! எதை சொன்னாலும் அதில் நொட்டை நொள்ளை என்று விமர்சிக்க இன்னொரு கூட்டம் கிளம்பும். இந்த ஒரு காரணத்திற்காகவே புயல் அடித்தாலும் சரி… புண்ணாக்கு விலை ஏறினாலும் சரி…. கருத்து சொல்ல மாட்டேன்டா என்று கழன்று கொள்வார்கள் ஹீரோக்கள். ஆனால் பிரதமர் மோடியின் குட் புக்கில் இருப்பவர்கள் சொல்லியே ஆகணுமாச்சே? சொல்லிவிட்டார் ரஜினி. அதே நேரத்தில் “அஜீத், விஜய் என்னப்பா சொல்றாங்க?” என்று கூட்டம் காத்திருக்க, இன்று தன் கருத்தை சற்று துணிச்சலாகவே கூறிவிட்டார் விஜய்.

இன்று ஏ.வி.எம் ஸ்டூடியோவில் நிருபர்களை சந்தித்த அவர், தன் கருத்தை பளிச்சென்று வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

”500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்துள்ள மத்திய அரசின் இந்த முடிவு நல்ல முடிவு. இது நிச்சயமாக நம் நாட்டிற்கு தேவையான, யாரும் யோசிக்க முடியாத, துணிச்சலான முடிவு. இது கண்டிப்பாக நாட்டின் வளர்ச்சியை முன்னேற்றும் என்பது உறுதி. ஆனால் இந்த பாதிப்புகள் அதிகமாகியிருக்கக் கூடாது என்று தோன்றுகிறது. சிறு தொழில் செய்யும் வியாபாரிகள், முதியவர்கள் பலரும் இதனால் பாதிப்படைந்து வருகின்றனர். செய்திகளில் பல விஷயங்களை பார்த்து வருகிறேன். மனதுக்கு வருத்தமாக இருக்கிறது.

இந்த முடிவை மத்திய அரசு எடுப்பதற்கு முன்பு, பின் விளைவுகள் குறித்தும் யோசித்திருக்கலாம். தன் நிலத்தை விற்று தன்னுடைய பேத்தியின் திருமணத்துக்கு சில லட்சங்கள் ரூபாயை கொண்டு வந்த ஒரு பாட்டி அது செல்லாது என்று அரசாங்கம் சொல்லவும் அதிர்ச்சியடைந்து தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். மருத்துவமனையில் பணம் வாங்காததால் பச்சிளம் குழந்தை ஒன்றுக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் இறந்து போயிருக்கிறது. இதையெல்லாம் கேள்விப்படும் போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.

யாரும் யோசிக்க முடியாத அளவுக்கு பெரிய புரட்சி தான் இது. மருந்து வாங்குபவர்கள் கூட அவதிப் பெற்று வருகின்றனர். இது போன்ற சில இக்கட்டன சூழ்நிலைகளை தவிர்த்திருக்கலாம். நாட்டில் உள்ள 20 சதவீத பணக்காரர்களுக்காக 80 சதவீத மக்கள் மீது பாதிப்பை ஏற்படுத்துவது சரியல்ல” என்றார் விஜய்.

 

Ajith statementATMBankconceptDemontisationdifficultilayathalapathi vijayPeople pinchpm modireserve bankvijayvijay criticized ModiVijay press meet
Comments (0)
Add Comment