மன்றம் இல்லேன்னா சரிபட்டு வராது! விழித்துக் கொண்ட விஜய் சேதுபதி

கட் அவுட்டுக்கு பால் ஊற்றுவதற்கு ரசிகர்கள் இல்லாத காலம்தான், ஹீரோக்களின் கெட் அவுட் காலம்! கெட்ட காலமும் கூட! தன்னை நோக்கி ஓடி வருகிற ரசிகர்களை, “போ… போய் உன் புள்ள குட்டிகளை படிக்க வை” என்பது நல்ல மனசு ஹீரோக்களின் அடையாளம். அதையும் மீறி வருகிறவர்களின் தோளில் கை போட்டுக் கொண்டு போஸ் கொடுப்பதில் தவறே இல்லை. ஒரேயடியாக மன்றத்தை கலைத்தாலும், அதையே தன் வெற்றி மகுடத்தின் ஒரு சிறகாக பொருத்திக் கொள்கிற அளவுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கிறார் அஜீத். ஆனால் அந்த கோடியை தொடுவதற்கு முன்பே, “போங்கய்யா போங்க. உங்களுக்கு வேற வேலை இல்லையா?” என்று விரட்டியடித்த விஜய் சேதுபதிக்கு சினிமா கொடுத்த தண்டனையைதான் பார்த்திருப்பீர்களே?

சமீபத்தில் வந்த எல்லா படங்களும் தலைகுப்புற விழுந்து, நெற்றியோரத்தில் சிராய்ப்பு. அப்படியிருந்தும் விஜய் சேதுபதிக்கு ஒரு இடத்தை கொடுத்து வைத்திருக்கிறது தமிழ்சினிமா. அதற்கு காரணம், அவரது அலட்டல் இல்லாத குணம். இந்த நேரத்திலும் கூட அவர் விழித்துக் கொள்ளவில்லை என்றால், பென்ஷனர்கள் லிஸ்ட்டில் விஜய் சேதுபதிக்கும் அவர் கேட்காமலே ஒரு அப்ளிகேஷனை நிரப்பிக் கொடுத்துவிடும் சினிமா.

திடீரென்று ஒரு கெட்ட ராத்திரியில் விழித்துக் கொண்டு இதையெல்லாம் அசைபோட்ட விஜய் சேதுபதி மறுநாள் காலையிலிருந்தே உஷாராகிவிட்டார். அவசரம் அவசரமாக தமிழகத்தின் 19 மாவட்டங்களிலிருந்து ரசிகர்கள் வரவழைக்கப்பட்டார்களாம். அவர்களிடம் நிறைய பேசினாராம் விஜய் சேதுபதி அவர்கள் கிளம்பும்போது கையில் கட்டு கட்டாக மன்ற உறுப்பினர் படிவங்கள் கொடுத்தனுப்பப்பட்டுள்ளது.

இனிமே குக்கிராமங்களில் கூட தலைவா… என்றோ, வருங்கால முதல்வரே… என்றோ, விஜய் சேதுபதியின் போஸ்டர்கள் தென்பட்டால், யாரும் அலட்டிக் கொள்ள வேண்டாம். அது ரசிகர்களின் விருப்பம் மட்டுமே!

Failure filmsfans associationOrange mittaiVijaysethupathy
Comments (0)
Add Comment