சமீபகாலமாக எந்த நிகழ்ச்சிக்கும் வருவதில்லை விக்ரம். ஐ படத்தின் கெட்டப்பே அவரது உடம்புதான்! ஒரு காலத்தில் உடல் மெலிந்து ஒரேயடியாக அச்சமூட்டிய விக்ரம், தற்போது இருக்கும் தோற்றம் அர்னால்டே ‘அடடா’ போடுகிற ரகம். அப்படிப்பட்டவர் ‘ஐ’ வெளிவருகிற வரைக்கும் அநாவசியமாக திரையுலக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு பிசுபிசுத்துவிடும் என்று நினைக்கிறாராம். அதனால்தான் ‘வாங்க வாங்க’ என்று கெஞ்சி அழைக்கிற சினிமா நிகழ்ச்சிகளுக்கு, ‘ஐ வரைக்கும் வெயிட் பண்ணுங்க. அப்புறம் கூப்பிடுற இடத்துக்கெல்லாம் வர்றேன்’ என்கிறார்.
அப்படியெல்லாம் இமேஜை கட்டிக்காத்த விக்ரம், இன்று ‘மக்கள் முதல்வர்’ ஜெயலலிதாவுக்கு ஆதரவாக திரையுலகம் நடத்திய மவுன உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார். ஒருபுறம் ஜெயலலிதா மீது தனிப்பட்ட மரியாதை கொண்டவர்தான் விக்ரம். இதற்கு முன் பலமுறை ஜெ. கலந்து கொண்ட திரையுலக நிகழ்ச்சிகளுக்கு முதல் ஆளாக போய் நின்றும் இருக்கிறார். ஆனால் இன்று…?
விக்ரமிடம், ‘நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு போய் சேர்ந்திட்டீங்களா? இன்னும் எவ்வளவு நேரத்தில் உண்ணாவிரத பந்தலுக்கு போவீங்க?’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தாராம் அந்த முக்கிய சினிமா புள்ளி. காரணம் வேறொன்றுமில்லை. இந்த படத்தின் சேனல் வெளியீட்டு உரிமையை வாங்கியிருப்பதே ஆளுங்கட்சி சேனல்தான். அட்வான்சாக ஒரு பெருந் தொகை வழங்கப்பட்டாலும், சுமார் 70 சதவீத பணம் இனிமேல்தான் வர வேண்டுமாம். அதனால்தான் இந்த விரட்டல்!
இருந்தாலும் விக்ரம் அங்கு வந்ததே மனப்பூர்வமாகதான் என்பதை அவரது முகமே காட்டிக் கொடுக்க, ஜெ. ஆதரவாளர்களுக்கும் பரம திருப்தி!