தமிழ்சினிமாவில் விமலின் இடம் பழசாக போயிருக்கலாம். ஆனால் அதை புதுப்பிப்பதற்காக அல்லும் பகலும் ஆலாய் பறந்து கொண்டிருக்கிறார் அவர். சொந்தப்பட சுமையை கூட தோளில் சுமப்பதும் அதனால்தான். அவ்வளவு ஏன்? இன்று வில்லங்க மனுஷனாக நோக்கப்படும் மதுரை அன்புச் செழியனின் வட்டிக் கணக்கில் விமலும் இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு வரப்போகும் மன்னர் வகையறா விமலின் பாரத்தை குறைத்து அவரையும் வெற்றி ஹீரோக்கள் வரிசையில் வைக்கும் என்று இப்போதைக்கு நம்புவோம். அதே நேரத்தில் தனக்கு பெயரும் புகழும் பெற்றுத்தந்த களவாணி பார்ட் 2 ஆசையும் அவருக்கு இருக்கிறது. ஆனால் பழைய கூட்டணியுடன் இணைந்து அதை செய்யத் தயாராக இல்லையாம் விமல்.
இருந்தாலும் தன்னுடன் இணைந்து நடிக்க ஓவியாவை அவர் அழைத்ததாகவும் அவர் மறுத்ததாகவும் ஒரு தகவல் உண்டு. இந்த நேரத்தில்தான் இவரும் ஜுலியும் கழுத்தில் மாலையும் கழுத்துமாக நிற்கிற ஸ்டில் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
விசாரித்தால், சினிமாவில் நடிக்க அழைத்த பலருக்கும் நோ சொன்ன ஜுலி, அப்பாவி விமலுக்கு மட்டும்… அதுக்கென்ன நடிச்சுட்டா போச்சு என்று கூறிவிட்டாராம். விமல் ஜுலியை அழைத்தது கூட, ஓவியாவின் ஒண்ணாம் நம்பர் எதிரி என்பதால் இருக்கலாம்.
என் நண்பனுக்கு நண்பன் எனக்கும் நண்பன் என்பது சசிகுமார் தியரி. என் எதிரிக்கு எதிரி எனக்கு தோஸ்து என்பது விமல் தியரி.