அலைபாயும் மண் சோறு  

தேவையில்லாத ஆணி பஞ்சர் கடைக்காரனுக்கு உதவினாலும் உதவும். தேவையில்லாத ஆட்களின் அரசியல் கனவு, தம்படிக்கு பிரயோஜனமில்லை. ‘ஒரு நபர்‘ கட்சிகளின் அட்ராசிடி, மற்ற மாநிலங்களில் எப்படியோ… தமிழகத்தில் மட்டும் தாராளம் ஏராளம். நாலு மாசத்துக்கு முன்பு வரை யாரென்றே அறியப்படாத அர்ஜுன மூர்த்தி ரஜினியின் ஒரு ஐந்து நிமிஷ பிரஸ்மீட்டுக்கு பின்பு இன்று ஒரு கட்சிக்கே தலைவர்.

இப்படி நாலு பேருக்கு தெரிஞ்சா போதும், நமக்கும் பால் டிகாஷன் கலக்கத் தெரியும் என்று டீக்கடை ஆரம்பிக்கிற நபர்களை ஓட ஓட விரட்டுகிற வல்லமை வாக்காள பெருமக்களுக்கு உண்டு. செய்வார்கள் என்றே நம்புவோம்.

இந்த ஒரு நபர் கட்சிகளின் கூட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறார் மண்சோறு. சினிமா மேடைகளில் மட்டுமல்ல, பேட்டியெடுக்க போகிற நிருபர்களிடம் கூட சேட்டை மேல் சேட்டை செய்து அட்டனென்ஸ் போட்டுக் கொள்ளும் மண் சோறு, திடீர் கட்சி ஆரம்பித்த காரணத்தை கேட்டால் வெலவெலத்துப் போவீர்கள்.

நாம் தமிழர் கட்சி இவருக்கு சீட் கொடுக்கவில்லையாம். நாட்டு நடப்பு விஷயங்களை சற்றே சீரியஸ்சாக கையாளும் நாம் தமிழர், மண்சோறுவின் கோமாளித்தனத்தை எப்படி பொறுத்துக் கொள்ளும்? இதையடுத்து வெகுண்டெழுந்த மண்சோறு, தனிக்கட்சி துவங்குவதாக அறிவித்தார். தமிழ் தேசிய புலிகள் கட்சி என்று அதற்கும் பெயரும் வைத்தார். புலியின் கம்பீரம் பொசுக்குன்னு போயிருச்சே என்று பலரும் கவலையுற்ற நிலையில், அந்த கட்சி கருவிலேயே நொறுங்கிய செய்தி வெளியாகியிருக்கிறது.

தேர்தலுக்கு குறைந்த நாட்களே அவகாசம் உள்ள நிலையில் கட்சியை பதிவு செய்ய முடியாது என்று கூறிவிட்டதாம் தேர்தல் ஆணையம். தே.மு.தி.க, பா.ம.க, நாம் தமிழர் என்று பல கட்சிகளுக்கும் போய் வந்த மண்சோறு, சொந்த கட்சியும் சுண்ணாம்பாகிவிட்ட நிலையில் அதிமுக வில் சேரக்கூடும் என்கிறார்கள்.

பல மேடைகளில் எடப்பாடி… டெட் பாடி என்று ஏளனம் செய்த மண்சோறு, எந்த முகத்தை வைத்துக் கொண்டு அங்கு போவாரோ?

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா…

edapadi palanisamyNaam Thamizharpuligal katchiseemanWandering mansooraligan
Comments (0)
Add Comment