ஓபிஎஸ் சுக்கும் விஜய் சேதுபதிக்கும் என்ன சம்பந்தம்? பிரஸ்மீட்டில் கலகல

விஜய் சேதுபதியின் நெக்ஸ்ட் ரிலீஸ் ‘கருப்பன்’. நடுவில் வெகு காலத்திற்கு முன் எடுத்து பெட்டியிலேயே கிடந்த ‘மெல்லிசை’ நாளைக்கு வெளியாகிறது. (புரியாத புதிர்னு பேர மாத்திட்டாங்கள்ல?)

நாளைக்கு புதிரை வைத்துக் கொண்டு, இன்று கருப்பனை பற்றி ஏன் பேச வேண்டும் விஜய் சேதுபதி? இந்த கேள்விக்கு பின்னால் ஏதேனும் காரணம் இருக்கலாம். இல்லாமலும் போகலாம். பட்… ‘கருப்பன்’ ட்ரெய்லர் தெறி மாஸ். படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக வருகிறார் விஜய் சேதுபதி. “இதுக்காக ஜல்லிக்கட்டு பழகி காளையோடு மோதவே இல்லீங்க. பாதுகாப்பா ரோப் கட்டிகிட்டு காளைய அடக்கியிருக்கேன். அவ்ளோதான்” என்று அடக்கமாக ஒப்புக் கொண்டதே அழகு!

“இந்தப்படத்திற்காக நான் மூணு பேருக்கு நன்றி சொல்லணும். ஒன்று பன்னீர் செல்வம். இரண்டு பன்னீர் செல்வம். மூன்று பன்னீர் செல்வம்” என்று அவர் ஒரே பெயரை குறிப்பிட, மேடையில் அமர்ந்திருந்த இயக்குனர் பன்னீர்செல்வம் ‘ஆனந்த கண்ணீர்’ செல்வமானார் அந்த நொடியில். வெகுநேரம் இயக்குனர் பன்னீர் செல்வத்தின் நற்குணங்கள் பற்றியே விவரித்துக் கொண்டு போன சேதுபதி, நான் கூட அப்படியில்ல என்று கூறியதெல்லாம் நற்பண்பின் உச்சம்.

பத்திரிகையாளர்களின் கேள்வி நேரத்தில்தான் அந்த குசும்பு கேள்வியை வீசினார் தினகரன் தேவராஜ். “மூணு தடவ பன்னீர் செல்வம் பன்னீர் செல்வம்னு சொன்னீங்க. அவர் கோஷ்டியில இருக்கீங்களா? அரசியலுக்கு எப்ப போனீங்க?” என்று கேள்வி எழுப்ப…. இவர் ஓ.பன்னீர்செல்வத்தைதான் சொல்கிறார் என்பதை சற்று லேட்டாக புரிந்து கொண்டு சிரித்தார் விஜய் சேதுபதி.

தலைவா… ஏன் தலைவா என்னை கோர்த்துவிடறீங்க என்றார். தொடர்ந்து இந்த பன்னீர்செல்வம் சமாதியில போய் தியானமெல்லாம் பண்ண மாட்டார் என்று பதில் கூறி, நாட்டு நடப்பில் நமக்கும் அக்கறை உண்டு என்று நிரூபித்தார்.

விஜய்சேதுபதி இயல்பா இருக்கிற வரைக்கும் நல்லாதான் இருக்கு. ஆனால் வளர்ந்த பிறகும் இப்படியிருக்கணுமே?

ஹ்ம்… ஒருகாலத்தில் இப்படியெல்லாம் இருந்தவர்தான் அஜீத்தும்!

https://youtu.be/W3Liz65Rq9M

am rathnamd imandhanyaDirector PanneerselvamkaruppanmellisaiopsPuriyatha PuthirvijaysethupathiYugabharathi
Comments (0)
Add Comment