வீண் புகழ்ச்சி, வெட்டி பந்தாவுக்கெல்லாம் மயங்குகிற ஆள் பாலா அல்ல. அவருண்டு, அவரது அலட்சியம் உண்டு, அடாவடி பேச்சு உண்டு, என்று கடந்து செல்லும் மனுஷனிடம், ‘பாராட்டு விழா வைக்கிறோம். கொஞ்சம் வர்றீங்களா?’ என்றால் அழைக்கிறவர்களின் கதி என்னவாகும்? ஒரு டப்பா சாரிடானை உள்ளே தள்ளுகிற அளவுக்கு தலைவலியில் முடிந்ததாம்.
வேறொன்றுமில்லை. ‘நான் கடவுள்’ படம் வெளிவந்து முழுசாக பத்து வருடம் ஆகிவிட்டதாம். அந்த படத்தினால் அடைந்த விழுப்புண்களும் வேதனைகளும் சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கு மறந்திருக்க வாய்ப்பில்லை. சுமார் இரண்டு வருடங்களாக கொடூர தாடியும், கோக்குமாக்கு தலைமுடியுமாக திரிந்த ஆர்யா, ஷுட்டிங் முடிந்து கிராப் வெட்டிக் கொண்டதையே பெரிய விழாவாக எடுத்து, பலருக்கும் பிரியாணி விருந்தளித்ததை கோடம்பாக்கம் மறக்காது. ஆர்யாவும் மறக்க மாட்டார். இப்படி தன்னிடம் வந்து சிக்குகிற ஹீரோக்களை, உயிரோடு பிரியாணியாக்கி அரையும் குறையுமாக தட்டில் போட்டு தாலாட்டுகிற பாலாவுக்கு இந்த பத்தாவது வருட நிறைவை பந்தாவாக கொண்டாடி மகிழ ஒரு வாய்ப்பளிக்க நினைத்ததாம் ஒரு டி.வி சேனல்.
விஷயத்தை கேட்ட பாலா, ‘அடப் போங்கய்யா லூசுங்களா’ என்பதை போல ஒரு பார்வை பார்த்ததுடன் ‘நான் கடவுள்’ ஆர்யா போலவே சில வசனங்களையும் ஓதி அனுப்பி வைத்தாராம்.
புகழுக்கு மயங்காத பாலாவே… நின் புகழ் இம் மண்ணுள்ளவரை ஓங்குக!