இன்னொரு சசிகலா ஆகிறாரா எஸ்.ஏ.சி?

அண்ட சராசரங்களையும் துண்டு போட்டு காவல் காக்கும் பரமசிவனுக்கே பேமிலி சண்டை வரும்போது, பிசாத்து எஸ்.ஏ.சி பேமிலிக்கு பிரச்சனை வராதா என்ன? அப்பனுக்கே புத்தி சொன்ன முருகனாக விஜய்யும், பிள்ளையை டென்ஷனாக்கும் அப்பராக எஸ்.ஏ.சி யும் இருப்பதுதான் காலக் கன்பியூஷன். (முருகனும் விஜய்யும் ஒண்ணா என்று கொடி தூக்கும் அன்பர்கள் கூல் கூல். இது ச்சும்மா உ.தா மட்டும்தான்)

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் லட்சக்கணக்கான தொண்டர்களை உள்ளடக்கியது. அல்வாவை சட்டியோடு தூக்கிக் கொடுக்க முன் வந்த எஸ்.ஏ.சி யாரிடம் ரகசிய கூட்டணி போட்டாரோ தெரியாது. தேர்தலை குறி வைத்து அவர் போட்ட கணக்குகள் எல்லாமே சுக்கு நூறாக உடைந்து விட்டது. மகன் விஜய் தனக்கு எதிராகவே கம்பு சுற்றுவார் என்று கனவிலும் நினைத்துப் பார்க்காத எஸ்.ஏ.சி, விஜய்யின் எதிர்கால கணக்குகளை குழப்பி கும்மியடிக்க ஆரம்பித்திருக்கிறார். சமீபகாலமாக அவர் ஊடகங்களுக்கு கொடுத்து வரும் பேட்டிகள் அத்தனையும் சேம் சைட் கோல். விஜய்யை அணைப்பது போல அணைத்து எலும்பை நொறுக்கிக் கொண்டிருக்கிறார் மனுஷன். அப்பாவின் பிடிவாதத்தையும், அசுர குணத்தையும் நன்கு உணர்ந்திருக்கும் விஜய், அவரை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வருவது தனி ஸ்டோரி.

இந்த நிலையில்தான் விஜய்யின் மக்கள் இயக்கம் முழுக்க முழுக்க எஸ்.ஏ.சி யின் கைக்கு போகக் கூடிய அபாயத்தையும் புட்டு புட்டு வைக்கிறார்கள் இங்கே. கிராமங்கள் வரைக்கும் ஊடுருவி இருக்கும் இந்த இயக்கத்தின் ஃபவுண்டர் எஸ்.ஏ.சிதான். இவரை கட்சியிலிருந்து ஒதுக்கி வைப்பது, கிட்டதட்ட முட்டையை உடைத்துவிட்டு குஞ்சு பொரிக்க நினைப்பது மாதிரியான ஆபத்து. அப்படியிருக்க, இவ்வளவு பெரிய இயக்கத்தை சாதுர்யமாக அவரிடமிருந்து மீட்பதுதான் சரி என்று நினைக்கிறதாம் விஜய் தரப்பு. ஆனால் விட்டுத்தருகிற மூடில் இல்லை எஸ்.ஏ.சி.

எதிர்காலத்தில் எஸ்.ஏ.சி துணை இல்லாமல் விஜய்யால் இந்த இயக்கத்தை கையில் எடுக்கவும் முடியாது என்கிறார்கள். ஆனால் விஜய்யை தாறுமாறாக நேசிக்கும் சிலர், இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. ஆணானப்பட்ட சசிகலாவே அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் டம்மி ஆக்கப்பட்டாரே? அதற்கு இணையாக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்று இரு பதவிகளை ஏற்பாடு செய்து ஈபிஎஸ்- ஓபிஎஸ் இருவரும் பிரித்துக் கொள்ளவில்லையா? அப்படி செய்துவிட்டால் போச்சு என்கிறார்கள் இந்த விஷயத்தை நுணுக்கமாக கவனிப்பவர்கள்.

இதற்கிடையில் அவசரப்பட்டு வாய் விட்டுவிடக் கூடாது. தேங்காயும் தனித்தனியாக பிரிக்க முடிந்தாலும், ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை. பொறுத்திருந்து கருத்துரைப்போம் என்று காத்திருக்கிற விஜய் ரசிகர்கள், தங்கள் தலைவனின் கட்டளைப்படி செயல்பட காத்திருந்தார்கள் இத்தனை நாளும். இந்த நேரத்தில்தான் திடீர் திருப்பம். எஸ்.ஏ.சி க்கு எதிராக அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்திலேயே தீர்மானங்களை போடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம். விஜய் பச்சைக் கொடி காட்டாமல் இப்படியெல்லாம் நடக்காது. ஆங்காங்கே எஸ்.ஏ.சி க்கு எதிராக கோஷங்களை எழுப்பி அதை விஜய்யின் காதுக்கு கொண்டு செல்லும் வேலைகளில் கடந்த இரு தினங்களாக இறங்கிவிட்டார்கள் அவர்கள்.

தொண்டையில படாம தண்ணி குடிக்கறது எப்படிங்கறதுதான் இவர்களின் ஒரே கவலையாக இருக்கிறது இப்போது.

actor vijayaiadmkEPSmasteropsS.A.ChandrasekarSAC interviewsasikalaSasikala FutureVijay Annavijay makkal iyakkamVijay political issueVijay S.A.C fight
Comments (0)
Add Comment