தென்னக நதிகள் என்றால், குறிப்பிட்டு சொல்லக்கூடிய நதிகள் 51. அதிலும் முக்கியமான காவேரி, கிருஷ்ணா, கோதாவரி.
கோதாவரிதான் பெரிய நதி. 1465 கி.மீ.
அதற்கப்புறம் கிருஷ்ணா. 1400 கி.மீ.
பிறகு காவேரி. 765 கி.மீ.
இவற்றை இணைக்க வேண்டும் என்பதுதான் ரஜினியின் லட்சியம். ஒரு மனிதன் சாதிக்க வேண்டும் என்று நினைப்பதில்லை தவறே இல்லை. அதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என்பதுதான் இப்போதைய பெரும் கேள்வி. ஏன் இதை அழுத்தமாக ஆராய வேண்டி இருக்கிறது என்றால், காரணம் இருக்கிறது. தமிழகத்தின் எங்கோ ஒரு மூலையில் இருக்கிற ரஜினி ரசிகனிடமோ, அல்லது பொதுமக்களின் ஒருவரிடமோ ‘நீங்கள் ஏன் ரஜினி அரசியலுக்கு வருவதை ஆதரிக்கிறீர்கள்?’ என்று கேட்டுப்பாருங்களேன்… ‘அவரு நதிகளை இணைக்கறேன்னு சொல்றார். அதனால்’ என்பார்கள்.
இந்த பலவீனத்தையும், அப்பாவி மக்களின் நம்பிக்கையையும் குறி வைத்து அடிக்கிறார் ரஜினி என்பதுதான் உண்மை. ரஜினியின் ஆசை ஒரு வேளை நிஜமாகவே கூட இருந்துவிட்டுப் போகட்டும். அதற்கு அவர் தமிழக முதல்வராக இருந்துவிட்டால் நடந்துவிடுமா? முதல்வராக ஆனாலும் கூட சத்தியமாக நடக்காது. அவர் இந்தியாவின் பிரதமராக இருக்க வேண்டும். அப்படியிருந்தாலும், அது அவ்வளவு எளிய காரியம் அல்ல. வாஜ்பாய் அரசில் துவங்கப்பட்ட தங்க நாற்கர சாலை, இன்னமும் பல நகரங்களில் முடியாமல் இருக்கிறது. காரணம், நிலம் கையகப்படுத்துதல் விஷயத்தில் நடக்கும் இழுபறி.
நாமாக போட்ட சாலைக்கே இந்த கதி என்றால் அதுவாக ஓடுகிற நதியை நினைக்கிற இடத்திற்கெல்லாம் இழுப்பது சாத்தியமா? அப்படி சாத்தியம் என்றால், அதற்கு நிலம் கையகப்படுத்துகிற அதிகாரம், ராணுவம் வந்தால் கூட நடக்காத காரியம் ஆயிற்றே? அதுமட்டுமல்ல, மாநிலங்களின் அதிகாரத்தை தாண்டி மத்திய அரசு நினைத்தால் கூட இதை நிறைவேற்றுவது கடினம். ஏற்கனவே ஒவ்வொரு இந்தியனின் தலையிலும் ஆயிரக்கணக்கான ரூபாய் கடன் இருக்கிறது. இவ்வளவு பெரிய நதிகளை இணைக்க வேண்டும் என்றால், அதற்கு உலக நாடுகளிடம் கையேந்த வேண்டும். அதற்கப்புறம் எத்தனை லட்சம் கடன் இந்தியக் குடிமகனின் தலையில் ஏறுமோ?
முதலில் தமிழ்நாட்டு நதிகளை இணைப்பதற்கே பெருத்த ராணுவ பலமும், அதைவிட பலமான மனசும் வேண்டும். அது ரஜினிக்கு இல்லை என்பதுதான் அவரது வழ வழா கொழ கொழா அணுகுமுறையில் தெரிகிறதே… அப்படியிருக்க, தென்னக நதிகளை இணைப்பதாவது?
முதலில் ரஜினி பல்லாண்டுகளாக பல ஆயிரம் கோடிகளை விழுங்கி ஏப்பம் விட்டிருக்கும் கூவத்தை சுத்தப்படுத்தி, குடிநீர் ஆதாரத்தை சென்னைக்கு கொண்டு வரட்டும். அதற்கே மூக்கு வீங்கிவிடும். நிலைமை அப்படியிருக்க… நதிகளை இணைத்தால் ஒரு கோடி என்பதும், நான் முதல்வரானால் தென்னக நதிகளை இணைப்பேன் என்பதும், விபரம் தெரிந்த ஆள் சொல்கிற விஷயம் அல்ல. அப்படியே விபரம் தெரிந்துதான் சொல்கிறார் என்றால்,
இவரைவிட ஏமாற்றுப் பேர்வழி வேறு யாருமே இல்லை.
இதெல்லாம் ஜனங்களுக்கு புரியுமா?
மரியாதையாக எழுதக்கற்றுக்கொள்.
எங்கள் தலைவர் ரஜினி அவர்களை பற்றி ஆதாரம் இல்லாமல் குற்றசாட்டு வைக்க வேண்டாம். 50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சி தான் தமிழகத்தை பாழ்படுத்தி விட்டன. உன்னை போன்றவர்கள் தான் காசுக்காக அவர்களுக்கு வக்காலத்து வாங்குகின்றனர். தமிழக மக்களின் ஆதரவுடன், சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் தமிழகத்தின் முதல்வர் ஆவது சத்தியம்.
பல வாய்ச் சவடால் வீரர்கள் என்னதான் மேடைக்கு மேடை கூப்பாடு போட்டாலும், அவர்களுக்கு மக்களின் கவனம் கிடைக்காது. ஆனால் ரஜினியின் ரத்தின சுருக்கமான வார்த்தைகள் அனைத்து மக்களின் இதயத்திலும் உடனே சென்று சேர்ந்து விடும். தமிழகத்தில் அந்த சக்தி அவருக்கு மட்டுமே உண்டு. இந்தளவிற்கு வல்லமை படைத்தவரைத்தான் தமிழகம் அரவணைக்க காத்திருக்கிறது. ரஜினி அரசியலுக்கு வந்தால் நாகரிகமான அரசியல் இருக்கும். இன்று தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலருடைய மேடைப் பேச்சு எப்படி இருக்கிறது?. சில கைத்தட்டல்களுக்காக மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகித்து தன்னைத்தானே தாழ்த்திக் கொள்கிறார்கல் அல்லவா! . பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத வெற்று கூச்சல்கள்தான் அவை. ரஜினியின் மேடை பேச்சு, இதுவரையில் யாரையும் , தாக்கிப்பேசி, காயப்படுத்தி நாம் பார்த்ததில்லை. இனியும் இருக்காது. கண்டிப்பாக அனைத்துத் தலைவரிடமும் நட்பு பாராட்டுவார் தமிழக நலனுக்காக அவர்களிடமும் ஆலோசனை கேட்பார், தான் என்கிற அகங்காரம் அறவே இருக்காது. மூன்று மைல்களுக்கு முன்னரே முதுகை வளைத்துக்கொண்டு நிற்க வேண்டிய அவசியம் கண்டிப்பாக இருக்காது. காலில் விழும் கலாச்சாரம் அடியோடு நிறுத்தப்படும், மிக எளிமையான ஆட்சியை நிச்சயம் ரஜினியால் கொடுக்க முடியும்.