‘ இனி ஃபேஸ்புக் திருமணங்கள் நடக்கும் ’ கவிப்பேரரசு வைரமுத்து ஆருடம்!

ஜூலை 13 வைரமுத்துவின் பிறந்த நாள். இந்த தினத்தை கவிஞர்கள் தினமாக அறிவித்து ஒவ்வொரு வருடமும் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள் அவரது எழுத்தை நேசிக்கும் அமைப்பினர். எதிர்வரும் ஜூலை 13 ந் தேதி வெற்றி தமிழர் பேரவை சார்பில் கவிஞர்கள் திருநாள் கலை இலக்கிய திருவிழா கோவையில் உள்ள கொடீசியாஅரங்கத்தில் மிக சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக அவரது மணிவிழாவும், பத்மபூஷன் விருது பெற்றமைக்கான பாராட்டு விழாவும் இணைந்து கொள்வதால், எவ்வருடமும் இல்லாத கொண்டாட்டமாக இந்த வருடத்தை சிறப்பிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வைரமுத்து, ‘வாழ்நாள் முழுவதும் எல்லாரையும் மனம் நிறைய பாராட்டிகிட்டே இருக்கேன். என்னையும் பாராட்டுங்கப்பா…’ என்று சிலேடையாக பேச ஆரம்பித்தார். வழக்கம் போல மடை திறந்த வெள்ளமாக ஓடிக் கொண்டிருந்தது அவரது பேச்சு. ‘இனி தாய்மொழி கல்வி என்பது சாத்தியமா என்று புரியவில்லை. ஏனென்றால் இன்று கலப்பு மணங்கள் வெகு சாதாரணமாகிவிட்டது. கேரள பெண்ணும் தமிழ் பையனும் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அப்படியென்றால் பிறக்கும் குழந்தைக்கு எது தாய் மொழி? கன்னட இளைஞனும் தமிழ் பெண்ணும் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அப்படியென்றால் பிறக்கும் குழந்தைக்கு எது தாய்மொழி?’

‘எதிர்காலத்தில் பேஸ்புக் திருமணங்கள் நடக்கலாம். நாடு விட்டு நாடு காதல் திருமணங்கள் நடக்கலாம். எனவே தாய் வழி கல்வி என்பது வரையறுக்க முடியாது. ஆனால் நான் சொல்ல வருவது என்னவென்றால், அந்தந்த மாநில எல்லைக்குள் இருக்கிற கல்விக் கூடங்களில் அந்தந்த மாநில மொழியை கட்டாயமாக்க வேண்டும். இது இந்தியா முழுக்க சாத்தியப்பட வேண்டும். இங்கு தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா பள்ளிகளிலும் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும். இதுதான் என் பிறந்த நாள் கோரிக்கை. இதை மத்திய அரசுக்கு வலியுறுத்தி ஒரு பேரணியாக செல்ல முடிவெடுத்திருக்கிறோம்’ என்றார் வைரமுத்து.

‘நாற்பது வருடங்களுக்கும் மேலாக தமிழகத்தை திராவிட கட்சிகள்தான் ஆண்டு வருகின்றன. அப்போதெல்லாம் முடியாத விஷயத்தை இப்போது உங்களால் சாதித்துவிட முடியுமா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்வியை சற்றே தடுமாற்றத்தோடு எதிர்கொண்டார் கவிஞர். ‘உண்மைதான். ஆனால் தொடர்ந்து முயற்சிப்போம்’ என்றார் நம்பிக்கையோடு.

பின்குறிப்பு- கோவையில் கவிஞர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் ஆறு ஏக்கர் பரப்பளவுள்ள இடத்திற்கு ‘வைர வனம்’ என்று பெயரிட்டு, அங்கு மரங்கள் வளர்க்க திட்டமிட்டிருக்கிறார்களாம். தனது பிறந்த நாளில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை அங்கே நடவிருக்கிறார் கவிப்பேரரசு. காலம் உள்ளவரை அதன் ஒவ்வொரு இலையும் கூட கவிதையாக காற்று வீசட்டும்….

birthday wishescentral govt. state govt. madhan karkigreen tree revaluationjuly13 birthdaykalaignar karunanithikaviperarasu vairamuthukodisium hallkovaiSlidethamizh mozhi kalvivaira vanamvetri thamizhar peravai
Comments (1)
Add Comment
  • kumar

    Joe Britto feeling disappointed
    கவிஞர் வைரமுத்து அவர்களை நேரில் சந்தித்து, எங்கள் கல்லூரி தமிழ் இலக்கிய விழாவில் உரை ஆற்ற அழைத்தோம்.
    முதலில் அவர்களுடைய உதவியாளரை தொடர்பு கொண்டு பேசினோம். கவிஞரை நேரில் சந்திப்பதற்கு அனுமதி பெற்றோம். அவர்களை நேரில் சந்தித்தபோது அழைப்பிதழை வழங்கினோம். பின்பு விழாவினைப்பற்றிய விவரங்களை கேட்டறிந்தார் . அதன் பின் மகிழ்ச்சியோடு கலந்து கொள்வதாக உறுதி அளித்தார். ஆனால் அவர் தரப்பில் சில நிபந்தனைகள் வைக்கப்பட்டது. அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றோம். இறுதியாக ஒரு நிபந்தனை அதில் அவர் எழுதிய மூன்றாம் உலகப்போர் என்ற புத்தகத்தை 500 புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று கூறினார்கள். நாங்கள் அழைப்பு விடுத்திருந்த நிகழ்ச்சி மாணவர்களால் தங்கள் செலவில் நடத்த படுகின்ற நிகழ்ச்சி, அப்போது அது மிகப்பெரிய தொகையாக இருந்தது .ஒரு புத்தகத்தின் விலை 240 , 5oo புத்தகங்களின் விலை 1,20,000(ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் ) ஆனால் நாங்கள் 300 புத்தகங்கள் வாங்க சம்மதம் தெரிவித்தோம். அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்துவிட்டோம்.இரண்டு நாட்களுக்கு பின்பு கவிஞருடைய வீட்டு தொலைபேசி எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது ,அவருடைய உதவியாளர் பேசினார். மீண்டும் 500 புத்தகங்கள் வாங்கியாக வேண்டும் என்று கூறினார். அப்போது 500 புத்தங்கள் வாங்க நாங்கள் தயார் நிலையில் இருந்தாலும்,

    இப்படிப்பட்டவர் இலக்கிய விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என்று முடிவுசெய்துவிட்டோம் .

    ஒருவர் ஒரு புத்தகத்தை எழுதினால் அதை புத்தக ஆர்வலர்கள் தாங்களாகவே வாங்கவேண்டும், இப்படி வலுக்கட்டாயமாக தள்ளக்கூடாது .

    பிரபலங்கள் எழுதுகின்ற புத்தகங்கள் இப்படித்தான் விற்பனை செய்யப்படுகின்றது

    தமிழை வளர்ப்பவர்களை விட தமிழை வைத்து வாழ்பவர்கள் தமிழ்நாட்டில் அதிகம்
    — கி.விஜயகுமார் Vijaya Kumar K