காலம் போன காலத்துல கவுச்சி வாடை வீசுதே? அச்சத்தில் திரை பிரபலங்கள்!
கீரை விதையை தெளிச்சா, மறுநாளே முளைச்சுரும். கேரட்டை புதைச்சா? காத்திருக்கணும் சில வாரங்களாவது. ஆனால் ‘எப்பவோ போட்ட விதை எக்குதப்பா கிளம்பி வருதே…’ என்று துண்டை காணோம் துணியை காணோம் என்று அலறுகிறார்கள் முன்னணி திரைப் பிரபலங்கள்.
தமிழகத்தில் திடீரென முளைத்த மீ டூ இயக்கம், அன்றாடம் ஒரு அணுகுண்டை வீசி அலற விடுகிறது. முதலில் அதில் ட்விட் போட்டு துவங்கி வைத்தவர் பாடகி சின்மயி. 2004 ல் நடந்த சங்கதியை அவர் இப்போது கூற, “ஏன்மா இவ்வளவு வருஷங்களா சும்மாயிருந்தே? அப்பவே தேங்கா உடைச்சுருக்கலாம்ல?” என்று கிளம்பிவிட்டது எதிர்கேள்வி.
‘சின்னம்மா சின்னம்மா….’ என்று பயபக்தியோடு பேசி வந்த ஓ.பி.எஸ் ன் வாய், ‘சசிகலா’ என்று சொல்வதற்கு எடுத்துக் கொண்ட வருடங்கள் எத்தனை? சின்மயியை கேள்வி கேட்பவர்கள், ஓபிஎஸ்சிடம், ‘ஏன் அப்பவே நீங்க சசிகலான்னு அவங்க பேர சொல்ல துணிவில்லாம இருந்திங்க?’ன்னு கேட்பார்களா? அப்படிப்பட்டதுதான் இதுவும்.
எல்லாவற்றுக்கும் ஒரு சமய சந்தர்ப்பம் வேண்டுமல்லவா? இருந்தாலும் தன் புகார் குறித்து பல்வேறு விதங்களில் அவர் பதில் சொல்லி வருகிறார். இது தமிழர்களை அழிக்க பிராமண இந்துத்வா செய்த கூட்டு சதி என்றும் சிலர் கிளப்பிவிடுகிறார்கள். (வைரமுத்துவை அழிச்சுட்டா தமிழினம் அழிஞ்சுருமா? என்கிற துணைக் கேள்வியும் இந்த நேரத்தில் எழாமல் இல்லை)
வைரமுத்து சின்மயி பிரச்சனை இப்படி ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் இன்றைய சூடான பகோடா யார் யார் என்று பார்த்தால் பொசுக்கென சிரிப்புதான் வருகிறது. ஆக்ஷன் கிங் அர்ஜுன் மீது, கன்னட நடிகை ஸ்ரூதி ஹரிகரன் பாலியல் குற்றச்சாட்டு கூறியிருக்கிறார்.
மம்பட்டியான் தியாகராஜன் மீது புகைப்பட கலைஞர் பிரித்திகா மேனன் ஒரு பாலியல் புகார் கூறியிருக்கிறார். ‘பொன்னர் சங்கர்’ படப்பிடிப்பின் போது அவர் தன்னை பாலியல் இச்சைக்கு வற்புறுத்தியதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
இன்னும் மாட்டப் போகும் ஓல்டுமேன்களின் பட்டியல் இதோடு முடியாது போலிருக்கிறது.
பல்செட் மாட்ற வயசுல இதென்ன புல்ஷிட்?

