ஒரு பாடலுக்கு ஆறு மாதம் உழைச்சாங்களாம்! இதுக்கு பேருதான் கொழுப்பா?

ஒரே ஒரு பாடல் காட்சிக்காக ஆறு மாதங்கள் உழைப்பை கொட்டுவது, பாகுபலி மாதிரியான படங்களுக்கோ, எந்திரன் மாதிரியான படங்களுக்கோ நடப்பது சகஜம். ஆனால் ‘முன்னோடி’ என்ற புதுமுகங்கள் நடிக்கும் படத்திற்காக நடந்தால் அதை கொழுப்பு என்பீர்களா, அக்கறை என்பீர்களா? அப்படத்தின் இயக்குனர் எஸ்.பி.டி.ஏ.குமாரின் பேச்சை கேட்காத வரைக்கும் கொழுப்பு என்றே டிக் அடிக்கும் மனசு! ஆனால் அவ்வளவு கொழுப்பையும் தன் பேச்சால் கரைத்தார் மனுஷன்.
விபரம் தெரிகிற வயதிலிருந்தே டைரக்டர் ஆக வேண்டும் என்றே வளர்ந்த மூளை அது. இதுவரைக்கும் ஒரு படத்தின் ஷுட்டிங்கை கூட பார்த்தவரில்லை. ஆனால் மனதில் ஏகலைவன் போல, அவர் தனது குருநாதராக நினைத்துக் கொண்டது மணிரத்னத்தை. சற்றே வெயிட்டான பேங்க் பேலன்ஸ் பேமிலியிருந்து வந்தவர் என்பதால், அவரே பணம் போட்டு, அவரே ‘முன்னோடி’யை எடுத்து முடித்துவிட்டார். விளைந்த நெல்லு விற்பனைக்கு வரும்போதுதான் விவகாரம், விகாரம் ஆகியிருக்கிறது.
ஒரு விநியோகஸ்தர் கூட வரவில்லை. “புதுமுகங்கள் நடிக்கும் படம். புதுமுகம் இயக்கிய படம். யார் சார் வருவா படம் பார்க்க?” என்று ஒற்றை வரி விமர்சனத்தோடு நிறுத்திக் கொண்டார்களாம். இந்தக்கருத்தை படம் பார்த்துவிட்டு சொன்னால் பரவாயில்லை. பார்க்க அழைக்கும்போதே சொன்னால் எப்படியிருக்கும்? அங்குதான் மனக் கிலேசம் ஆகிப்போனார் எஸ்.பி.டி.ஏ.குமார். “இப்படி எல்லாருமே புறக்கணிச்சா, எடுத்த படத்தை கடல்ல கொண்டு போய் கொட்றதா என்ன?” என்று புலம்புகிற அளவுக்கு போனது நிலைமை.

இந்த நேரத்தில்தான் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் படத்தை பார்க்க முன் வந்தாராம். முதலில் சிம்பிளாக பார்க்க நினைத்தவருக்கு காட்டப்பட்டது அந்த ஆறு மாத உழைப்பில் உருவான பாட்டு. அப்புறமென்ன? முழு படத்தையும் பார்க்க தூண்டியதே அந்த பாடல்தான். “மிக சிறப்பாக வந்திருக்கு படம். நானே ரிலீஸ் பண்றேன்” என்று களம் இறங்கிவிட்டார்.
ஜுன் 2 ந் தேதி திரைக்கு வரப்போகும் முன்னோடி….,
இதற்கு முன் தவிர்த்தவர்களை, “இந்தப்படத்தை வாங்காம விட்டுட்டோமே…” என்று ஏங்க வைக்கப் போகிறது பின்னாடி!
https://youtu.be/wVrzZ0SQtdM
