அஜீத்தின் செல்போன் சுவிட்ச்டு ஆஃப்? எல்லாம் இந்த தவில் வித்வான்களால்தான்!
அஜீத்தின் மொபைல் நம்பர் என்னவென்பது செவ்வாய் கிரகத்தில் சில பேருக்கும், கோடம்பாக்கத்தில் சில பேருக்கும் மட்டுமே தெரிந்த தேவ ரகசியம். அந்த நம்பர் தெரிந்தவர்கள் அதை, ‘இந்தாங்க’ என்று மற்றவர்களுக்கு ஷேர் பண்ணி, அவர்கள் ஷேர் பண்ணிய விஷயம் அஜீத்திற்கு தெரிந்தால் நம்பர் கொடுத்த நபரை தன் பிரண்ட்ஸ் லிஸ்ட்டிலிருந்து (?) நிமிஷத்தில் நீக்கிவிடுவார். இதை தெரிந்து வைத்திருக்கும் அந்த சில பேரும், விஜயகாந்தே கம்ப ராமாயணத்தை பற்றி அரை மணி நேரம் சொற்பொழிவு நடத்தினாலும் அதைக் கேட்டு சித்தம் தடுமாறி இந்த நம்பரை யாருக்கும் சொல்லிவிட மாட்டார்கள். கட்…! அப்படியாப்பட்ட அஜீத்தின் மொபைல் இரண்டு நாட்களாக சுவிட்ச்டு ஆஃப். ஏன்?
“தல பிறந்த நாளை தமிழகம் கொண்டாடட்டும். குட்டித்தல பிறந்த நாளை நாங்களும் கொண்டாடுவோம். உங்க வீட்டுக்கு நேரில் வந்து வாழ்த்தணும். பிறந்த நாள் வீட்ல நடக்குதா? இல்ல… ஏதும் நட்சத்திர ஓட்டலில் நடக்குதா? ப்ளீஸ் சொல்லுங்க” என்று சில முக்கியஸ்தர்கள் அவருக்கு போன் அடிக்க, “உங்க அன்பே போதும். நேர்ல வந்து சிரமப்பட வேண்டாம்” என்று இந்த அழைப்புகளையெல்லாம் மறுத்தே வந்தாராம். இருந்தாலும் நாளை மார்ச் 2 ந் தேதி நடைபெறவிருக்கும் இந்த பிறந்த நாளை அமர்க்களமாக கொண்டாடிவிட வேண்டும் என்று அவரை துரத்த ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கத்தின் தவில் வித்வான்கள் அடங்கிய சிறப்பு கோஷ்டி.
இவர்களின் தொடர் தொணதொணப்புக்கு பதில் சொல்ல முடியாமல்தான் செல்போனை ஆஃப் பண்ணிவிட்டாராம் அஜீத்! இப்பவே அவரது வெறிபிடித்த ரசிகர்கள் ‘குட்டித்தலக்கு வாழ்த்துக்கள்’ என்று பிளக்ஸ் போர்டுகளும் பேனர்களும் செய்து வைத்து மிரட்ட ஆரம்பித்துவிட்டார்கள். செல்போனை ஆஃப் பண்ணலாம். கிறுக்குப்பிடிச்ச ரசிகர்களின் மனங்களை என்ன பண்ண சொல்றீங்க அஜீத்?