திருச்சி ரவுடிகளுடன் எஸ்.ஆர்.பிரபாகர் பிரண்ட்ஷிப்! போலீஸ் மோப்பம்!

திருக்குறளே தெரியாதவன் வள்ளுவருக்கு வாழ்க்கை வரலாறு எழுதிய கதையாகதான் இருக்கும் சில பல இயக்குனர்களின் தேடல்! ஆனால் அ- னா ஆ-வன்னா எழுதினால் கூட அதிலும் ஒரு நேர்த்தி இருக்க வேண்டும் என்று நினைக்கிற இயக்குனர்கள்தான் நிலைக்கிறார்கள். நிற்கிறார்கள். எஸ்.ஆர்.பிரபாகரனும் அப்படியொருவர்தான் என்பது சமீபத்தில் தெரிய வந்திருக்கிறது.
முதல் படமான சுந்தரபாண்டியன், சசிகுமாரின் கலெக்ஷன் லிஸ்ட் படங்களில் எப்போதும் பெயர் சொல்லும் படமாக அமைந்துவிட்டது. அதை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகருக்கு அதற்கப்புறம் வந்த போன்கள் எல்லாமே முன்னணி தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்தும், முன்னணி ஹீரோக்களிடமிருந்தும். அதற்கப்புறம் உதயநிதி நடிக்கும் ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தை இயக்கினார். அவரது மூன்றாவது படம் ‘சத்ரியன்’. விக்ரம்பிரபு ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு ‘முடிசூடா மன்னன்’ என்றுதான் முதலில் இதற்கு தலைப்பு வைத்திருந்தார். ஆனால் வழக்கம் போல தலைப்பு பஞ்சாயத்து. இதே தலைப்பை வேறொரு தயாரிப்பாளரும் வைத்திருந்ததால், சத்ரியன் என்று மாற்ற வேண்டியதாயிற்று.
வழக்கமாக படம் பார்த்து(?) படம் பண்ணும் இயக்குனர்கள் மத்தியில் நிஜ வாழ்வில் நடக்கும் விஷயங்களை மட்டும்தான் கதையாக எழுதும் வழக்கம் இருக்கிறது எஸ்.ஆர்.பிரபாகருக்கு.
வில்லன், ஹீரோ மோதலை சொல்லும் படம் என்றாலும், திருச்சியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபல தாதாக்கள் சிலரின் உண்மை சம்பவங்களை பின்னணியாக கொண்டு எழுதப்பட்டதாம் சத்ரியன். இதற்காக அந்த மாவட்டத்தை சேர்ந்த ரவுடிகளை சந்தித்து சில நாட்கள் அவர்களுடனேயே சுற்றி திரிந்திருக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகர். இவர் பார்ப்பதற்கும் சற்றே வாட்ட சாட்டமாக இருப்பதால், சந்தேகக்கண்ணோடு இவரை நோட்டம் விட்டதாம் போலீஸ். அதற்கப்புறம்தான் இவர் ஒரு சினிமா டைரக்டர் என்று தெரிய வந்ததும் சாஃப்ட் மோடுக்கு வந்திருக்கிறார்கள்.
‘பொதுவாகவே ஆக்ஷன் படம் என்றால், மதுரை தாதாவைதான் காட்டுவார்கள். நான் திருச்சிக்கு வந்திருக்கிறேன். இனி தமிழ்சினிமா கொஞ்ச காலம் திருச்சியை சுற்றி சுற்றி வந்தாலும் ஆச்சர்யமில்லை’ என்கிறார் எஸ்.ஆர்.பிரபாகர்.
