ரசிகன் வயிற்றெரிச்சல் நமக்கெதுக்கு? புதிய திட்டத்தில் இயக்குனர்!
முன்பெல்லாம் ஒருவர் மட்டும் தியேட்டரில் தனியாக அமர்ந்து திகில் படங்களை பார்த்தால், ஒரு லட்சம் பரிசு என்றெல்லாம் அறிவிப்புகள் வரும். இப்போது பல தியேட்டர்களில் ஒருவரோ இருவரோ அமர்ந்துதான் படம் பார்க்கும் நிலைமை. டிக்கெட் கொடுத்த கடனுக்காக படத்தையும் போட்டுத் தொலைக்கும் தியேட்டர்கள், சின்னப்படங்கள் என்றாலே ‘உவ்வே’ ஆகி ஓடுகிறார்கள். இதனால் பல சிறு படங்களை பூஞ்சை பிடித்து புஸ்வாணம் ஆகிற கண்டிஷனில் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் காரணம் டிக்கெட் கட்டணம்தான். ஐம்பது லட்சத்தில் எடுக்கப்பட்ட படத்திற்கும் 120 ரூபாய் டிக்கெட். 60 கோடியில் எடுக்கப்பட்ட படத்திற்கும் 120 டிக்கெட்.
யார்தான் பொறுத்துக் கொள்வார்கள் இதை? ரசிகனின் வயிறெரிச்சலை மாற்றிவிட்டால் போதும். சிறு படங்களுக்கும் உயிர் தண்ணி ஊற்றிவிடலாம் என்று கணக்குப் போட்ட இயக்குனர் எஸ்.பி.எஸ் குகன், புதிய திட்டம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே ‘மதுரை டூ தேனி, வழி ஆண்டிப்பட்டி’ என்ற வெற்றிப்படத்தை இயக்கியவர்.
இவரது புதிய திட்டம்தான் என்ன? “சிட்டி தியேட்டரா இருந்தாலும் சரி. வில்லேஜ் தியேட்டரா இருந்தாலும் சரி. எங்க படம் ஓடும் தியேட்டர்ல டிக்கெட் ரேட் வெறும் 19 ரூபாய்தான். ஒரு டீ குடிக்கவே 15 ரூபாய் செலவழிக்கும் ரசிகன், இந்த 19 ரூபாய் டிக்கெட்டுக்கு மயங்க மாட்டானா?” என்பதுதான் குகனின் பலே ஐடியா!
இதுக்கு எப்படிய்யா தியேட்டர்காரர்கள் ஒத்துப்பாங்க? அதற்கும் ஒரு தனித் திட்டம் ஏற்படுத்தி தியேட்டர்காரர்களிடம் பேசிவிட்டாராம். இந்த புது முயற்சிக்கு பிள்ளையார் சுழியாக மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி படத்தின் பார்ட் 2 அமையவிருக்கிறது. மே மாதம் திரைக்கு வருகிறார்களாம்.
அதுக்குள்ள பிரதமர் மோடி பத்தொன்பது ரூபாய் நோட்டுகளை கூட புழக்கத்தில் விடுவார். நாட்லதான் எவ்ளோ அதிசயம் நடக்குதே?