விஜய் சேதுபதிக்கு அணில் சேமியா மனசு!
எவ்வளவு சிக்கல் இருந்தாலும், இழுத்தால் கையோடு வருகிற நல்ல உணவு சேமியா! அப்படியொரு சேமியா மனசுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார் விஜய் சேதுபதி. எப்போது அவர் நாடு போற்றும் நடிகர் ஆனாரோ… அப்போதிலிருந்தே ஐஸ் விளம்பரம், அப்பள விளம்பரம், புட்டு விளம்பரம், பூட்டு விளம்பரம் என்று நாலாபுறமும் அவரை இழுக்க பார்த்தது விளம்பர யுகம். நல்லவேளையாக நோ நோ என்று தப்பி ஓடியவர், திடீரென அணில் சேமியா விளம்பரத்திற்கு மட்டும் ஓகே சொல்லிவிட்டார்.
ஒரு விளம்பரம் அதிக பட்சம் பத்து செகண்டுகளில் முடிந்தால் பரமதிருப்தி. அதுவே 20 செகன்ட் என்றால், சரிய்யா… வாங்குறோம். நசநசன்னு பேசாதே என்ற காமெண்ட் வரும். ஆனால் இதையெல்லாம் தாண்டிய நீளத்தில் அமைந்திருக்கிறது விஜய் சேதுபதி நடித்த அணில் சேமியா விளம்பரம். ஆனால் எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பு தட்டாத விளம்பரமாக்கிவிட்டது விஜய் சேதுபதியின் குரலும், அந்த கொஞ்சலும். குழந்தையிடம் குழந்தையாகவே மாறிப் பேசும் அவரது ஸ்டைலுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் இனிக்க இனிக்க கைதட்டல்.
ஒருபுறம் இப்படி சந்தோஷப்படுத்திய விஜய் சேதுபதி, தனக்கு வந்த விளம்பர சம்பளத்தில் ஒரு பகுதியை அதாவது ஐம்பது லட்சத்தை அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அடிப்படை வசதிகளற்ற ஆரம்ப பள்ளிகளுக்கு வழங்கியிருக்கிறார். அவற்றில் சில உடல் ஊனமுற்றவர்களுக்கான பள்ளி.
சாமியா பார்த்து கொடுத்தா காசோ… சேமியா பார்த்துக் கொடுத்த காசோ… தேவைக்கு தானம் பண்ணிய விஜய் சேதுபதி கிரேட்தான்யா… கிரேட்!