ரசிகரின் பதில்! கவுதம் கார்த்திக் வேதனை!
ஒரே நேரத்தில் திரையரங்கத்தில் ஓடிக் கொண்டிருக்கும் இரண்டு படங்களுக்கான பிரஸ்மீட் ஒரே மேடையில் இதற்கு முன் நடந்திருக்குமா? வரலாறை புரட்டினால் கூட சட்டென கண்டுபிடிக்க முடியாத சம்பவம் நேற்று நடந்தது. வனமகன், இவன் தந்திரன் படங்களின் பத்திரிகையாளர் சந்திப்புதான் அது. இந்த வியப்பான நிகழ்வுக்கு காரணம், கேளிக்கை வரி மற்றும் ஜி.எஸ்.டி. அதை தொடர்ந்த திரையரங்குகள் கதவடைப்பு.
வனமகன் ஒரு வாரமும், இவன் தந்திரன் மூன்று நாட்களும் ஓடியிருந்த நிலையில் திடீரென இவ்விரு படங்களின் குரல்வளையை நெரித்தது இந்த ஸ்டிரைக்! நல்லவேளை… வியாழனன்று மாலை சுமார் 4 மணிக்கு நல்ல செய்தி வந்தது. தியேட்டர் ஸ்டிரைக் உடனடியாக வாபஸ் பெறப்பட்டு இதனால் நிறுத்தப்பட்டிருந்த சுமார் ஏழு படங்கள் மீண்டும் அந்தந்த தியேட்டர்களில் வெளியானது. அதற்கு முன்பே வெளியாகி ஓடிக் கொண்டிருந்த மரகதநாணயம், வனமகன் படங்களும் மீண்டும் அந்தந்த தியேட்டர்களில் ஓடுவதற்கு ஏற்பாடானது.
இதையடுத்துதான் பத்திரிகையாளர்களை மீட் பண்ண வந்திருந்தார்கள் இவ்விரு படக்குழுவினரும். ஜெயம் ரவி, இயக்குனர் விஜய், தயாரிப்பாளர் அழகப்பன், கௌதம் கார்த்திக், ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் கண்ணன், தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய கவுதம் கார்த்திக், “மறுபடியும் இந்தப்படம் ரிலீஸ் ஆகப்போகுது என்ற தகவலை நான் ட்விட்டரில் பதிவு செய்திருந்தேன். அதுக்கு கமென்ட் பண்ணிய ஒரு ரசிகர், ‘தமிழ்ராக்கர்ஸ்ல பார்த்துக்குறோம்’ என்று கூறியிருந்தார். மனசு வேதனையா இருந்திச்சு. என்னையோ என் முகத்தையோ பிடிக்கலேன்னா நீங்க எனக்காக அந்தப் படத்தை பார்க்க வேண்டாம். ஆனால் படத்தில் உழைத்திருக்கும் மற்றவர்களுக்காக தியேட்டருக்கு சென்று பார்க்கலாமில்லையா?” என்றார் வேதனையோடு.
பின்னாலேயே மைக்கை பிடித்த தனஞ்செயன், “எப்பவுமே ட்விர்ட்டல கருத்தை பகிர்வதோடு நிறுத்திக்கணும். கீழேயிருக்கிற கமென்ட்டுகளை படிக்கவே கூடாது” என்று புதிய ரூட் சொன்னார் கவுதமுக்கு!