ட்விட்டரிலிருந்து விலகிய சிம்பு மீண்டும் வர வாய்ப்புண்டா?

‘உங்க எதிர்மறை எண்ணங்கள்ல தீய வைக்க…’ என்றுதான் சாபம் கொடுக்கவில்லை சிம்பு. மற்றபடி இந்த கெட்டப்பசங்க இருக்கிற ஏரியாவுல நமக்கென்ன வேலை என்று திடீர் ‘டேர்னிங்’ அடித்துவிட்டார். அவ்வப்போது ட்விட்டரில் வந்து தன் கருத்துக்களை தெரிவித்து வந்த சிம்பு, இப்போது ஒரேயடியாக அதிலிருந்து விலகியதை அவரது ரசிகர்கள் பேரதிர்ச்சியோடு கவனித்து வருகிறார்கள்.
‘நான் எப்பவும் பாசிட்டிவ் எண்ணம் கொண்டவன். ஆனால் சோஷியல் மீடியாவுல நெகட்டிவ் தாட்ஸ் நிறைய இருக்கு’ என்பதுதான் சிம்புவின் விளக்கம். தன்னம்பிக்கைக்கு பெயர் போன டி.ராஜேந்தர், இன்றளவும் ‘தன்மான சிங்கம்’ என்று அழைக்கப்படுகிறார். அவர் சந்திக்காத விமர்சனம் இல்லை. அவமானம் இல்லை. அவ்வளவையும் தகர்தெறிந்துவிட்டு, வாங்கடா பார்க்கலாம் என்று சிலுப்புவதை ரசிக்கும் கூட்டம், அந்த துடுக்கு சிம்புவுக்கு இல்லையே என்று விமர்சிக்கிறது. மூட்டை பூச்சிக்கு பயந்து பெட்ஷீட்டையே கொளுத்திட்டாரே என்று விமர்சிக்கிறார்கள் இதே சோஷியல் மீடியாவில்.
இருந்தாலும் சொறி புடிச்ச குரங்கும், ட்விட்டரை தடவிய விரல்களும் சும்மாயிருந்ததாக சரித்திரம் இல்லை. திரும்பவும் வருவார் சிம்பு.

