விஜய் சேதுபதியை அவமானப் படுத்திய ஜீவா, சசிகுமார்?

கொஞ்சம் புதுசா யோசிச்சா போதும். ‘கமர்ஷியலா இல்லேப்பா’ என்று கதவை இழுத்து மூடுகிற ஹீரோக்கள்தான் கோடம்பாக்கத்தில் கொள்ளை பேர் இருக்கிறார்கள். அரைத்த மாவையே அரைக்கிற இந்த ‘மாவு ஸ்பெஷலிஸ்டுகள்’, வருஷத்துக்கு நாலு படம் நடித்தாலும் நாலும் அவுட் என்கிற நிலைமையில்தான் இருக்கிறது நடப்புக் கணக்கு! இருந்தாலும் இவர்களின் கமர்ஷியல் ஆசைக்கு பிரேக்கே இல்லை.

ஆனால் விஜய்சேதுபதி மட்டும்தான், இருக்கிற கொள்ளியில் கொஞ்சம் இதமான கொள்ளியாக இருக்கிறார். பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார், மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஒரு கதை சொன்னாராம். எக்ஸலன்ட் என்று முதுகில் தட்டிக் கொடுத்த விஜய் சேதுபதி, “என்னால இப்ப தேதி ஒதுக்க முடியாத நிலைமை. அதனால் ஜீவா, சசிகுமார் ரெண்டு பேர்ல யாராவது பொருத்தமாக இருப்பாங்க. போய் கதை சொல்லுங்க” என்று அனுப்பி வைத்திருக்கிறார்.

போன இடத்தில்தான் பொரி உருண்டையில் எலி மருந்தை மிக்ஸ் பண்ணி ஊட்டியிருக்கிறார்கள் இருவரும். “இதெல்லாம் ஒரு கதையா? கேக்கறதுக்கு நல்லாயிருக்கு. தியேட்டருக்கு வந்தா ஒரு பய பார்க்க மாட்டான்” என்றெல்லாம் விமர்சித்தார்களாம். மனம் வெதும்பிய அருண், விஜய் சேதுபதியிடம் விஷயத்தை சொல்ல…. “சரி விடுங்க. நானே நடிக்கிறேன்” என்றாராம் அவர்.

இந்த தகவலை உறுதி செய்து கொள்ள சசிகுமார் தரப்புக்கு போன் செய்தோம். முற்றிலும் வேறு தகவல் வந்தது அங்கிருந்து. “அந்த கதையில் நடிக்க சசிகுமார் ஆர்வமாக இருந்தார். படத்தை சசிகுமாரின் சொந்த நிறுவனமான கம்பெனி புரடக்ஷன்ஸ் சார்பிலேயே உருவாக்கவும் முன் வந்தார். ஆனால் துரதிருஷ்ட வசமாக அடுத்தடுத்து நடந்த பேச்சு வார்த்தைகளில், இயக்குனரின் சம்பளம் மற்றும் நிர்வாக சிக்கல்கள் காரணமாக கனத்த மனதோடு அந்த படத்தில் பங்கு பெற முடியாத சூழல் ஏற்பட்டது” என்கிறார்கள்.

ஒரு சினிமாவுக்குப் பின் நடப்பதே இன்னொரு சினிமா கதையா இருக்கும் போலிருக்கே?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அஜீத்திற்கு 7 அடி உயர வெண்கல சிலை! வைக்க பர்மிஷன் தருமா அரசு?

Close