தமிழகம் ஊழலில் பீகாரையே மிஞ்சிவிட்டது. எரிகிற தீயில் எண்ணையை ஊற்றும் கமல்!
இப்போதுதான் ஒவ்வொரு உண்மையாக வெளிவர ஆரம்பித்திருக்கிறது. லோக்கல் டாக்ஸ் ப்ளஸ் ஜி.எஸ்.டி விஷயமாக தமிழக மந்திரிகளை சந்தித்த விஷால், மிகவும் துணிச்சலாக பேசி வருவதாக கூறப்படுகிறது. அதிலும் வரிவிலக்குக்காக எந்தெந்த படங்களுக்கு எவ்வளவு தொகை கொடுத்தோம் என்பதை பொத்தாம் பொதுவில் வைத்து பேசிவிட்டாராம். அதாகப்பட்டது மகாஜனங்களே படத்திற்கு 4.50 லட்சம், வனமகன் படத்திற்கு 15 லட்சம், காற்று வெளியிடை படத்திற்கு 60 லட்சம் என்று லஞ்சப்பணம் கைமாறியதை அவர் புட்டு புட்டு வைக்க, அப்படியே வெளியே பரவிவிட்டது அது.
ஒரு திரைப்பட விழாவில் இந்த விஷயத்தை மீடியா முன்பும் கூறிவிட்டார் மன்சூரலிகான்.
ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பங்கு பெற்ற தயாரிப்பாளர் கே.ராஜன் “ரஜினி படத்திற்கு ஒரு கோடி, அஜீத் படத்திற்கு ஒரு கோடி, விஜய் படத்திற்கு ஒரு கோடி” என்று வரிவிலக்கு பெற்றதற்கான லஞ்சத் தொகையை போட்டு உடைத்தார். இத்தனைக்கும் அவரது பக்கத்தில் அமர்ந்திருந்தவர் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா.
இவ்வளவுக்கு பிறகும் சும்மாயிருந்தால் எப்படி? இன்று காட்டமாகவே தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார் கமல்.
“தமிழகத்தில் திரைப்படங்கள் எடுப்பது திட்டமிட்டே கடினமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியின் கீழ் இன்னும் பல சித்ரவதைகளையும், ஊழல்களையும் திரைப்படத்துறை சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இப்பிரச்சினையைப் பொறுத்தவரை, பக்குவமடைந்த ஒருவனாக திரைத்துறையினருடன் ஒற்றுமையாக செயல்பட என்னால் முடிந்தவரை நான் முயற்சி செய்கிறேன். அதேவேளையில், சுயநலமுள்ள அரசியல்வாதிகளின் கைகளில் மாட்டிக் கொள்ள நான் விரும்பவில்லை.
தமிழகம் ஊழலில் பீகாரையே மிஞ்சிவிட்டது. தமிழகத்தில் நிலவும் ஊழலில் திரைப்படத் துறை உள்ளிட்ட பல துறைகள் சிக்கிக் கொண்டுள்ளன. இதை எதிர்க்க நான் இன்னும் வலுவான போராட்டங்களை எதிர்பார்க்கிறேன்” என்று கமல் கருத்து தெரிவித்துள்ளார்.
அவரது கருத்து மிக சரியானது. கவனிக்கத்தக்கதுதான் என்றாலும், மந்திரிகள் மட்டுமே முடிவெடுக்க வேண்டிய இந்த நிலையில் கமல் சொன்ன கருத்து மேலும் கோபத்தை தூண்டினால் என்னாவது? ஒருவேளை இரண்டில் ஒரு கை பார்த்துவிடலாம் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ?
https://youtu.be/2VRH1YOWpAE

