கெட்ட வார்த்தை, வன்முறை இல்லாமல் வாழ்க்கையே இல்லை! சென்சார் அமைப்பை வெளுத்து வாங்கிய மிஷ்கின்

போலீஸ் பற்றி மாறுபட்ட கோணத்தில் அணுகும் படம்தான் ‘தற்காப்பு’. இப்படத்தை இயக்கியுள்ளவர் ஆர்.பி.ரவி. கினெடாஸ்கோப்   நிறுவனம் சார்பில் டாக்டர் எஸ்.செல்வமுத்து, என். மஞ்சுநாத் தயாரித்துள்ளார்கள்.

இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டுவிழா இன்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.

தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் நடிகர் கார்த்தி பாடல்களை வெளியிட ஜெயம்ரவி பெற்றுக்கொண்டார். ட்ரெய்லரை இயக்குநர் மிஷ்கின் வெளியிட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் மிஷ்கின்  பேசும்போது,

“இந்தப்படத்துக்கு யுஏ சான்றிதழ் கொடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். யுஏ மற்றும் ஏ சான்றிதழ் பெற்ற படங்கள் முப்பது சதவீத வரி கட்டவேண்டியிருக்கிறது. இன்றைய திரைப்படத்துறை இருக்கும் நிலையில் தயாரிப்பாளர்களுக்கு அது பெரிய அடி. தணிக்கைத்துறையின் செயல்பாடுகளால் நாங்கள் சுதந்திரம் இழந்திருக்கிறோம். கெட்ட வார்த்தைகள், வன்முறை இருந்தால் அதற்கு ஏ சான்றிதழ் என்று சொல்லிவிடுகிறார்கள். கெட்ட வார்த்தை, வன்முறை இல்லாமல் வாழ்க்கையே இல்லை. நான் ஒருவரைக் கோபம்கொண்டு பேசும் போது போடா செல்லமே -ன்னா திட்ட முடியும்?

நான் பிசாசு என்றொரு படமெடுத்தேன். ஒரு படம் தோற்றுவிட்டால் 50 குடும்பங்கள் தோற்றுவிடும். ஒரு கலைஞனுக்குச் சுதந்தரம் தேவை. படத் தணிக்கையின்போது சில வார்த்தை களை நீக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். இதனால் எங்களுக்குச் சுதந்திரம் இல்லை.

சினிமாவைப் பற்றிய தவறான எண்ணம் உள்ளது. படத்தைக் குழந்தைகளுடன் பார்க்கவேண்டும் என்று. சினிமாவை குழந்தைகளுடன் பார்க்கக்கூடாது. அதற்கான மீடியம் அல்ல சினிமா. கார்ட்டூன்தான் குழந்தைகளுடன் பார்க்கவேண்டும். திரையரங்கில் பார்க்கப்படும் சினிமா, அடல்ட் மீடியம். பெரியவர்கள் பார்க்கும் படம். குழந்தைகளுடன் யாரும் திரையரங்குக்கு வரவேண்டாம். மை டியர் குட்டிச்சாத்தான் படத்துக்கு வேண்டுமானால் குழந்தைகளுடன் வரலாம். டைட்டானிக் படத்தில் கூட முத்தக்காட்சி உள்ளது.

சென்சாரில் இது குழந்தைகளுடன் பார்க்கமுடியாது என்கிறார்கள். என் படத்துக்குக் குழந்தைகளுடன் வராதீர்கள். பிசாசு படம் பார்த்துவிட்டு சொன்னார்கள், படம் அருமையாக உள்ளது. ஆனால் பிசாசு இருக்கிறது என்றார்கள். பிசாசை மோசமாகச் சித்தரித்துதான் படங்கள் வந்துள்ளன. ஆனால் மனிதர்களைவிட பேய்கள் நல்லவை. பிசாசு ஒரு தெய்வம், தெய்வத்துக்கு ஒருபடி மேல். பிசாசைப் பார்த்தால் பயப்படவேண்டாம், என்று ஒரு படம் எடுத்தேன். ஆனால் படத்தில் பிசாசு வந்துவிட்டது, அதனால் ஏ சான்றிதழ் என்றார்கள். இதனால் இயக்குநர் பாலாவிடம் திட்டுதான் வாங்கினேன். தணிக்கைக்கு என்று ஒரு பொறுப்பு உள்ளது. கதையை எழுதும்போதும், காட்சியாக எடுக்கும்போதும் எண்ணியதுபோல செய்யமுடியவில்லை. சுதந்திரம் இல்லாவிட்டால் அது என்ன கலை?

நாங்கள் படப்பிடிப்பு நடத்தும்போதே ஒரு காட்சி வைத்தால், இதை வெட்டிவிடுவார்கள் என்று கேமிராமேன் சொல்லுகிறார், அந்த இடத்திலேயே எங்களுக்குச் சுதந்திரம் இல்லாமல் போய்விடுகிறது. ஒரு விஷயத்தை எழுதும்போதே இப்படி வைத்தால் திட்டுவார்களே என்று அடித்துவிட்டு எழுதவேண்டியிருக்கிறது. எங்களுக்குச் சுதந்திரம் வேண்டும். அதற்கு, தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரைத்துறையினர் ஆவண செய்யவேண்டும்.

நான் அடுத்து திகில் கலந்த ஏ படம்தான் எடுக்கப்போகிறேன், என் படத்துக்குப் பெண்கள், குழந்தைகள்  தயவுசெய்து வரவேண்டாம். எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி எல்லாம் இல்லாமல் போயிருந்தால் நம் வாழ்க்கை என்னவாகியிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள், அப்படிப்பட்டவர்கள் இருக்கும் இந்தத் துறையைப் பாதுகாக்கவேண்டியது அனைவருடைய கடமை” என்று பேசினார். இந்த இயக்குநர் ரவி சிறந்த உழைப்பாளி. வாழ்த்துகள் ”என்றார் இயக்குநர் மிஷ்கின்.

இயக்குநர் பி.வாசு பேசும் போது,

 ” கடந்த 30 ஆண்டுகளாக நான் சினிமா விழாக்களில் கலந்து கொண்டு வருகிறேன். இன்று எனக்கு பிறந்தநாளும் கூட. என் படக்குழுவினர் தொழில்நுட்பக் குழுவினரை விட்டு விட்டு நான் கலந்து கொள்ளும் முதல் விழா இதுதான். இங்கே  என் மகனுக்காக வந்துள்ளேன். ஒரு பெண்ணுக்கு பிறந்த வீடு புகுந்த விடு என்று இரு  வாழ்க்கை இருக்கும் என்பார்கள். ஆண்களுக்கும் இரண்டு வாழ்க்கை இருக்கும். ஒன்று நமது வாழ்க்கை  இன்னொன்று பிள்ளைகளால் வரும் வாழ்க்கை. மகன் ஆளாகும்வரை அப்பாக்கள் படும் கஷ்டம் எல்லாருக்கும் புரியாது. எங்கப்பா என்னை ஆளாக்கப் பட்டது இப்போது ஒரு தகப்பனாக எனக்குப் புரிகிறது.

எல்லா இயக்குநரும் என்னிடம் கதை சொல்ல வேண்டுமே என்று சக்தியிடம் கதை சொல்ல தயங்குகிறார்கள்.ஆனால் நான் சக்திக்காக கதை கேட்பதில்லை. சக்தி கேட்கச் சொன்னால் மட்டும்தான் கேட்பேன். நான் வரிவிலக்குக் குழு, தணிக்கைக் குழுவில்  எல்லாம் உறுப்பினராக இருக்கிறேன்.

பார்க்கிற படங்களில் சிலர் நல்ல கதையை சரியாகச் சொல்லாத போது சில காட்சிகளில் கோட்டை விட்டதை எல்லாம் பார்த்தால் வருத்தப் படுவேன். 50 படங்கள் இயக்கிவிட்டேன். நடிப்பது சிரமம் என்பது எனக்குத் தெரியும். என்னை விஜயகாந்தும் மகராஜனும் நடிக்கக் கூப்பிட்டார்கள். நான் எவ்வளவோ பேருக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்து இருக்கிறேன். ஆனால் முதல்நாள் படப்பிடிப்பில் நடிக்க பதற்றமாக இருந்தது எனக்குள் யாரோ புகுந்து விட்டமாதிரி பதட்டமாக இருந்தது. அப்போது  எல்லா கண்களும் சுற்றிலும் பார்க்க அமைதியான சூழலில் நடிப்பது எவ்வளவு சிரமம் என்று புரிந்தது.

சக்தியைப் பொறுத்தவரை அவனை நான் பாராட்டவில்லை என்று தன் அம்மாவிடம் சொல்வானாம், அப்பா பாராட்டவில்லையே என்று குறை படுவானாம்.

இந்தப்படம் ‘தற்காப்பு’ திருப்தியாக வந்து இருக்கிறது. எனக்கு பிடித்தது. இனி சக்திக்கு நல்ல நேரம் வரும். இனி மற்றவர்கள் அவனைப் பாராட்டுவார்கள். நான் என்றும் சொல்வேன் மக்கள் கதாநாயகன் யாரென்று பார்ப்பதில்லை. கதையைத்தான் பார்க்கிறார்கள். அதற்குத்தான் இயக்குநர் தேவை. இப்படம் நல்ல கதையுடன் வந்திருக்கிறது. ” என்று வாழ்த்தினார்.

நடிகர் ஜெயம் ரவி பேசும் போது ,

” என் பழைய நண்பர்களில் சக்தியும் ஒருவர். என் அப்பாவும் சுலபமாகப் பாராட்டமாட்டார். நடிக்கும்போது சுற்றிலும் இருக்கிற 40 பேரை மனதில் வைத்து நடிக்காதே தியேட்டரில் இருக்கிற பல கோடி பேருக்காக நடி என்பார்.

என் படங்களைப் பார்த்து விட்டு அது சரியில்லை இது சரியில்லை என்று குறையாகவே சொல்வார்.

சரியில்லாத எல்லாவற்றையும் தூக்கிவிடலாம் என்பார்.

அப்போ எது சரின்னாவது சொல்லுங்கப்பா என்பேன்.

  அதற்கு அவர் கெட்டதை எல்லாம் எடுத்து விட்டால் மீதி எல்லாம் நல்லதுதானே என்பார். ‘தற்காப்பு’ நல்ல தலைப்பு. நிறைய பேர் தற்காப்புக்காகப் படம் எடுக்கிறார்கள். நாலு பாட்டு, நாலு பைட்டு கதை சுமாரா இருந்தால் போதும் என்று நிறைய பேர் தற்காப்புக்காகப் படம் எடுக்கிறார்கள்.  அப்படித் தற்காப்புக்காகப் படம் எடுக்காதீர்கள். நானும் அப்படித் தற்காப்புக்காக சில படங்கள் நடித்திருக்கிறேன்.

சினிமா பொழுது போக்கும் இல்லை. கலையும் இல்லை. பார்ப்பவரை கட்டிப் போட வேண்டும் சினிமா அது போதும். நான் நடிக்க  3 ஆண்டுகள் எடுத்த படம்’தனி ஒருவன்’ . அப்போது என்ன கேப் சார் 3 ஆண்டுகள்  படமே இல்லை என்றார்கள். இந்த ஒரே ஆண்டு 3 படம் கொடுத்தேன். என்ன சார் இந்த ஒரே ஆண்டு 3 படம் என்கிறார்கள். மற்றவர் பேசுவதைப் பற்றி கவலைப்படாமல் உழைக்க வேண்டும் பலன் நிச்சயம் உண்டு. உதாரணம் என் ‘தனி ஒருவன் ‘வெற்றி ” என்றார்.

சக்திவேல் வாசு பேசும் போது,

 ” இந்தப் படத்துக்கு நிறைய பாசிடிவ் எனர்ஜி இருக்கிறது. காரணம் நாங்கள் எல்லாருமே நல்லவர்கள். சமுத்திரக்கனி என்றாலே பாசிடிவ் எனர்ஜிதான் அது பெரிய பலம். என் அப்பா எனக்காகப் போய் வாய்ப்பு கேட்ட ஒரே இயக்குநர் மிஷ்கின் சார்தான். இங்கே அவர் வந்திருக்கிறார். ஜனநாதன் சார் வந்திருக்கிறார். கார்த்தி அண்ணா வந்து இருக்கிறார். அவர் சிறுத்தையில் நடித்த போலீஸ் கேரக்டர் எனக்குப் பிடிக்கும். காரணம் சிக்ஸ் பேக்ஸ் இருக்காது. அதே போல தல அஜீத்தும் நடிக்கும் யதார்த்தமான போலீஸ் கேரக்டர் எனக்குப் பிடிக்கும். யதார்த்தமான போலீஸ் தொப்பையுடன்தான்  வருவார். தொப்பை இல்லை என்றால் தமிழ்நாடு போலீசே கிடையாது.

அப்பாவுக்கும் எனக்கும் நெருக்கம் குறைவு அப்பா பேச மாட்டாரா என்று நினைத்து ஏங்கி இருக்கிறேன். அப்பா எப்போதும் சினிமா சினிமா என்று பரபரப்பாக இருப்பார். ஆனால் அதெல்லாம் குடும்பத்திற்காக என்று எனக்கு மனைவி மகன் என்று வந்த பிறகுதான் இப்போது புரிகிறது. அப்பா மகன் மீது வைத்திருக்கும் பாசம் வெளியில் தெரியாது. என் அப்பா சந்தோஷ் சுப்பிரமணியம் பிரகாஷ்ராஜ் மாதிரி. நான் ஜெயம்ரவி மாதிரி. அப்படித்தான்  பலநாள் நினைத்திருந்தேன். அப்போது புரியவில்லை. இப்போது புரிகிறது. என் குடும்பம் மனைவி மகன் என்று வந்த பிறகுதான் புரிகிறது.

இந்தப் படத்துக்காக நாங்கள் வியர்வை தான் சிந்தினோம். ஆனால் தொழில்நுட்பக் கலைஞர்கள் தொழிலாளர்கள் எல்லாமே ரத்தம் சிந்தினார்கள். ஒருவருக்கு 6 வது மாடி யிலிருந்து விழுந்து மண்டை உடைந்து விட்டது. படப்பிடிப்பு மறுநாள் நிறுத்தப்பட்டுவிட்டது.

மருத்துவமனை போய் பார்த்தபோது எப்படி இருக்கிறீர்கள் என்றேன் ‘நான் நல்லாருக்கேன். படப்பிடிப்பு எப்படி போய்க் கொண்டு இருக்கிறது?’ என்றார். எனக்கு அழுகையே வந்துவிட்டது, தொழிலாளர்கள் அவர்கள் இல்லாமல் சினிமா இல்லை. ” என்றார்.

நடிகர் கார்த்தி பேசும்போது ,

” படத்தின் பெயர்  ‘தற்காப்பு’ . போஸ்டரைப் பார்த்தாலே ‘தற்காப்பு’ நல்லபடம் எனறு தெரிகிறது. நம்பிக்கை வருகிறது. லிங்குசாமி சார் சொல்வார் நல்லபடமா இல்லையா என்பது போஸ்டரிலேயே தெரியும் என்று.

எனக்கும் என் அப்பா பற்றிய நினைவு வருகிறது. அப்போது அப்பா சொல்வார் அப்பாவிடமும் குருவிடமும் பாராட்டை எதிர்பார்க்கக் கூடாது அப்படி ஒரு பாராட்டு வரவே கூடாது. பாராட்டு வராத வரைதான் வேலை செய்வோம் என்று.

எனக்கு சக்தியை நன்றாகத் தெரியும் ஸ்டண்ட் க்ளாஸில் பார்ப்பேன்.நானும் விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை ஆனால் முயன்றால் முடியும்.

எதுவும்10 நாள் வரவில்லை என்றால் முயன்றால்11 வது நாள் வரும். முயற்சியை மட்டும் விடக்கூடாது. உடனே வெற்றிவராது. ஆனால் முயற்சி கவனிக்கப்படும் இதைத்தான் நானும் செய்கிறேன். சக்திக்கும் சொல்கிறேன். ” என்றார்.

விழாவில் இயக்குநர் பி. வாசுவுக்கு கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

விழாவில் இயக்குநர்கள்  எஸ்.பி ஜனநாதன், சமுத்திரக்கனி , ஜி.என்.ஆர். குமரவேலன்,கிருஷ்ணா, நடிகர் வத்சன் சக்கரவர்த்தி, நடிகை வைஷாலி, தயாரிப்பாளர்  எஸ்.நந்தகோபால், ‘ஆஸ்ட்ரோ’ என்.சி. ராஜாமணி,  கமலா திரையரங்க உரிமையாளர் கணேஷ் , ஒளிப்பதிவாளர் ஜோன்ஸ் ஆனந்த், இசையமைப்பாளர்  எ.ஏச் ஃபைசல், பாடல்கள் எழுதிய மோகன்ராஜ், படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் ஆகியோரும் கலந்துகொண்டு பேசினார்கள். முன்னதாக  கினெடாஸ் கோப்   நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ள டாக்டர் எஸ்.செல்வமுத்து, என். மஞ்சுநாத் அனைவரையும் வரவேற்றனர். நிறைவாக  ‘தற்காப்பு’  பட இயக்குநர் ஆர்.பி.ரவி நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அவள பத்தி பேசாதீங்க… நிருபரிடம் கடுப்படித்த ஹீரோவின் மனைவி!

தனி ஒருவனாக இருந்தும் சிரிக்கலாம். அல்லது கூட்டமாக நின்றும் சிரிக்கலாம். ஏனென்றால் விஷயம் அப்படி! ஒரு ரோஜாச் செடி ஜன்னலுக்கு வெளியே பூத்தால் சந்தோஷம். அதுவே ஜன்னலுக்குள்ளும்...

Close