சிவகார்த்திகேயனை அழவிட்ட நக்கீரன் கோபால்!

தமிழ்சினிமா இன்டஸ்ட்ரி அண்ணாந்து பார்க்கும் உயரத்திலிருக்கிறார் சிவகார்த்திகேயன். “தானா முளைச்ச சுயம்பு. தாளிக்க முடியாத கடுகு. வேக வைக்காத வெந்தயம், விரட்டிப் பிடிக்க முடியாத பந்தயம்” என்றெல்லாம் அவரை சுற்றி சுற்றி வந்து பலர் கும்மியடித்தாலும், எதையும் மண்டையில் ஏற்றிக் கொள்ளாத பக்குவம் இருக்கிற ஒரே காரணத்தால்தான், இன்னமும் குடை சாயாமல் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

நேற்று அந்த வண்டியை மேலும் ஆட்டிப் பார்த்தது ‘அதாகப்பட்டது மகா ஜனங்களே’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா. ‘இளம் சூப்பர் ஸ்டார்’ என்று அவரை அழைத்தார் இப்படத்தை வெளியிடவிருக்கும் பி.டி.செல்வகுமார். அவ்வளவுதான் காது ரெண்டையும் பொத்திக் கொண்டு, கண்களையும் மூடிக் கொண்டார் சிவகார்த்திகேயன். அதே விழாவில் இயக்குனர் பேரரசு பேசுகையில், “சினிமாவை மட்டுமல்ல… சினிமாக்காரர்களையும் நல்லா புரிஞ்சு வச்சுருக்கார் சிவா. அதனால்தான் அவரால் இந்த உயரத்தை தொட முடிஞ்சுருக்கு” என்று கூறியது சத்தியத்திலும் சத்தியம்.

இறுதியாக பேசிய சிவகார்த்திகேயன், “இங்கு என்னை பற்றி என்னென்னவோ பேசினாங்க. எல்லாருடைய அன்புக்கும் நன்றி. ஆனால் என் அப்பாவை பற்றி பேசினார் தம்பிராமய்யா. அது ஒண்ணுதான் எனக்கு சந்தோஷம். என் அப்பாவை பற்றி அறிந்தவர்கள், அவரை பற்றி பேசும்போது மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும். ஒருமுறை நக்கீரன் கோபால் தன் வீட்டு திருமணத்திற்கு என்னை அழைக்க வந்திருந்தார். இன்விடேஷனை கொடுத்துட்டு கிளம்பும்போது என் அப்பாவின் போட்டோவை பார்த்துட்டார். ‘நீங்க அவரோட மகனா?’ என்று வியந்தவர், அதற்கப்புறம் எங்கப்பாவை பற்றி நிறைய பேசினார். திருச்சியில் ஜெயில் சூப்பிரண்டன்டா எங்க அப்பா இருந்ததையும், அவரோடு இவர் பழகியதையும் கேட்க கேட்க எனக்கு கண்ல தண்ணியே வந்திருச்சு.

“‘வேலைக்காரன்’ படப்பிடிப்பில் இருக்கும் போது தம்பி ராமய்யா எங்க அப்பா பற்றி நிறைய சொல்லியிருக்கார். நான் இப்ப நல்லாயிருக்கேன். என் அப்பாவுக்கு நிறைய செய்யணும்னு ஆசைப்படுறேன். நிறைய பேசணும்னு ஆசையா இருக்கு. ஆனால் முடியல. அவர் உயிரோட இல்லை. அதனால் தம்பிராமய்யாவின் மகன் உமாபதிக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான். உங்க அப்பாவை நல்லா வச்சுக்கங்க….”

இப்படி மிக மிக நெகிழ்ச்சியாக பேசி விழாவை நிறைவு செய்தார் சிவா. ஒழுக்கமான ஜெயில் சூப்பிரண்டன்ட் மகன். அதே ஒழுக்கத்தை சினிமாவிலும் கடை பிடிப்பதால்தான் கெட்ட சக்திகள் அவரை நெருங்க முடியவில்லை போலும்!

இப்படியே இருங்க சிவா…

https://youtu.be/YKiQDqjawNs

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தங்கர்பச்சான் குரலை தயவுசெய்து கேளுங்க!

Close