நயன்தாராவின் கட் அவுட் ஆசை! த்ரிஷா கதிதானா இனிமே?
மேலே பறக்காத பருந்தை கீழே கிடக்கிற சொறி நாய் கூட கேவலமாக நோக்கும்! மேலே மேலே என்று போய் கொண்டே இருப்பதுதான் உழைக்கிறவர்களுக்கு அழகு. அப்படி தமிழ்சினிமாவில் டாப் ஹீரோயின் இடத்தை பிடித்துவிட்ட நயன்தாராவுக்கு, ‘அதுக்கும் மேலே…’ என்கிற ஆசை வராமல் போகுமா? வந்தேவிட்டது.
அவர் நடித்து சில தினங்களுக்கு முன் திரைக்கு வந்த ‘டோரா’ திரைப்படம் எப்படி? அதன் கலெக்ஷன் எப்படி? தியேட்டருக்குள் விசில்கள் எப்படி? விமர்சனங்கள் எப்படி? என்கிற ஏரியாவுக்குள் நாம் நுழையத் தேவையில்லை. ஆனால் நயன்தாராவின் விளம்பர ஆசைக்குள் நுழைந்து விமர்சித்தே ஆக வேண்டிய கட்டாயத்திலிருக்கிறது ரசிகனின் மனசு. ஏன்?
சென்னையில் ‘டோரா’ ரிலீஸ் ஆன தியேட்டர் வாசலில் பல அடி உயரத்தில் கட் அவுட் வைத்து அதற்கு பாலாபிஷேகம் பண்ண வைத்துவிட்டார் நயன். இதற்கான செலவுகளை அவரது ரசிகர் மன்றத் தலைவர் விக்னேஷ் சிவனே பார்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
என்னை அறிந்தால் படம் வெளியான நேரத்தில் அப்படத்தில் நடித்த த்ரிஷா, பல இடங்களில் தனது செலவில் தனக்கு கட் அவுட் வைத்துக் கொண்டார். இதில் கடுப்பான அஜீத் ரசிகர்கள், போம்மா அந்தப்பக்கம்… என்று கட் அவுட்டை கழற்றி கடாசிய கொடுமையெல்லாம் நிகழ்ந்தது. அதற்கப்புறம் த்ரிஷாவின் மார்க்கெட், கமர்க்கட் போல செல்லாமல் போனது வேறு விஷயம்.
இந்த வரலாற்று உண்மையெல்லாம் புரியாதவர் அல்ல நயன்தாரா. இருந்தாலும்… ஆசை யாரை விட்டுச்சு?
https://youtu.be/csi2blAK9IM