சவுந்தர்யா பட ஷுட்டிங்! தமிழில் பேச ஆளில்லை?
இன்று தமிழ் படங்களில் முழங்கும் பல ஹீரோக்களுக்கு தமிழில் எழுத படிக்க தெரியாது! தமிழில் பேச மட்டுமே தெரிந்த அவர்கள் தங்கள் பலவீனத்தை எங்கும் வெளிப்படுத்திக் கொள்வதில்லை. இவர்கள்தான் வருங்காலத்தில் தமிழுக்காக முழங்கி, தமிழுக்காக தீ குளிக்கப் போவதாக நம்புகிறார்கள் அப்பாவி ரசிகர்கள். அந்த விவகாரம் இப்போ எதற்கு? அதைவிட பிரமாதமான அழிச்சாட்டியம் ஒன்று நடந்து வருகிறது கோலிவுட்டில்.
ரஜினி மகள் சவுந்தர்யா இயக்க, தனுஷ் ஹீரோவாக நடிக்கும் ஒரு புதிய படத்தின் ஷுட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. இதில் பணியாற்றும் முக்கியமான டெக்னீஷியன்கள், உதவி இயக்குனர்கள் அத்தனை பேரும் மும்பையை சேர்ந்தவர்கள். தக்காளி ஜுசுக்குக் கூட இவர்கள் தமிழ் பேசுவதில்லை. எந்நேரமும் இங்கிலீஸ்தான். அதிலும் வரலாற்றிலேயே இல்லாதளவுக்கு இந்த உதவி இயக்குனர்களுக்கு சென்னையிலிருக்கும் நட்சத்திர ஓட்டலில் ரூம் போடப்பட்டுள்ளது. அவர்கள் வந்து போக சொகுசு காரும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நம்ம ஊரிலிருக்கும் வழக்கமான அசிஸ்டென்ட் டைரக்டர்களை ஷுட்டிங் முடிந்ததும் எங்காவது சந்து பொந்தில் இறக்கிவிடும் இயக்குனர்கள், “காலையில நாலு மணிக்கு ஸ்பாட்ல இருக்கணும். புரியுதுல்ல?” என்று அதட்டிவிட்டு போகிற கதை இப்போதும் நடக்கிறது.
ஆனால் சொகுசு சுந்தரர்களாக பவனி வருகிறார்கள் இந்தப்படத்தில் பணியாற்றும் உதவி இயக்குனர்கள். நல்ல விஷயம். பாராட்டுவோம். ஆனால் படத்தில் வேலை செய்யும் இரண்டு புரடக்ஷன் மேனேஜர்களும், சுற்றி நிற்கும் லைட் மேன்களும், மேற்படி உதவி இயக்குனர்கள் பேசும் தஸ்ஸு புஸ்ஸு இங்கிலீஸ் புரியாமல் இம்சைக்குள்ளாவதுதான் ஐயோ பாவம்!
சக்ரி டோலட்டி என்றொரு இயக்குனர் தமிழே தெரியாமல் தமிழ் படம் எடுக்க வந்த மாதிரி, இவர்கள் வந்திருக்கிறார்கள். படம் நல்லா வரட்டும்… டும்… ம்…!
https://youtu.be/3qkZYYgrhgg