ரஜினியும் கைவிட்ட நடிகையர் திலகம் கீர்த்தி சுரேஷ்!
‘இந்த அல்ப சந்தோஷத்திலும் பல்ப் ஒடைச்சுட்டாங்களே, அழுவதா, சிரிப்பதா?’ என்று கவலைப்பட்டு கண்ணீர் சிந்தியிருப்பார் கீர்த்தி சுரேஷ். கடந்த இருபத்திநாலு மணி நேரமாக கோடம்பாக்கத்தின் வானிலையில் அநியாய ஜில். பேட்ட வந்த சூடோடு ரஜினியின் அடுத்தப்படம் குறித்த அப்டேட்ஸ் வந்தால் ஜில்லாக மாட்டார்களா என்ன?
ஏ.ஆர்.முருகதாஸ்- ரஜினி இணையும் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் கீர்த்தி சுரேஷ் என்றொரு தகவல் சோஷியல் மீடியாவில் தெறித்தது. பலரும் ட்விட்டரில் கீர்த்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். ஆனால் அந்த சந்தோஷம் கீர்த்திக்கும் இருக்க வேண்டுமல்லவா? அவர் தரப்பில் விசாரித்தால், ‘யாருமே ரஜினி படத்திற்காக கால்ஷீட் கேட்டு வரலீங்க’ என்கிறார்கள்.
நிஜம் என்ன? முருகதாஸ் ரஜினிக்கு சொன்ன மூன்றாவது கதை இது. இதற்கு முன் இரண்டு கதைகளை சொல்லியிருந்தாராம். அதில் ஒரு கதையில்தான் கீர்த்திக்கு ஹோப் இருந்திருக்கிறது. ஆனால் கீர்த்தியின் துரதிருஷ்டம். அந்த மூன்றாவது கதையைதான் படமாக்க சொல்லியிருக்கிறார் ரஜினி. அப்படியிருக்க… எப்படி கீர்த்திக்கு வாய்ப்பு கிடைக்கும்?
இந்தப்படத்தை பொருத்தவரை ரஜினி போலீஸ் ஆபிசராக நடிப்பதால் அவருக்கு ஜோடி இல்லை என்றும் கூறுகிறார்கள்.
எது எப்படியோ? த்ரிஷாவை பேட்டயில் பார்த்துமா ஆசைப்படுறீங்க கீர்த்தி?