வீடு புகுந்து தாக்கிய சந்தானம்! ரத்தகளறியான கொடுக்கல் வாங்கல்!
பல நாள் இழுபறி ஒரு நாள் கோபமாக வெடித்துவிட்டது. அதன் விளைவு? ஒரே ரத்தகளறி… சந்தானத்தின் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு… போலீஸ் தேடல்!
சந்தானம் நல்லாயிருந்த(?) காலத்தில் ஏகப்பட்ட சொத்துக்களை வாங்கிக் குவித்தார். அவரது நெடுநாள் லட்சியமான ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஆசையும் அப்போதுதான் வந்தது அவருக்கு. இதையடுத்து ஒரு பெரும் தொகையை பில்டர் பிரேம் ஆனந்திடம் கொடுத்திருந்தாராம் சந்தானம். பணத்தை வாங்கியவர் பில்டிங் கட்ட ஆரம்பிப்பதற்குள் சந்தானத்திற்கு பணக்கஷ்டம். அவர் தயாரித்த படங்கள் வரிசையாக நஷ்டத்தை ஏற்படுத்தியது. அப்புறமென்ன? தனது ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஆசையில் மண்ணை போட்டு மூடிவிட்டார். அதற்காக கொடுத்த பணத்தை பில்டரிடம் கேட்டதற்கு, அவர் பாதியை கொடுத்துவிட்டு மீதிக்கு இழுத்தடித்தாராம். நடுவில் என்ன நடந்ததோ? கடும் கோபத்திற்கு ஆளாகிவிட்டார் சந்தானம்.
நேற்று பில்டரின் அலுவலகத்திற்கே போன சந்தானம் வாக்குவாதத்தில் ஈடுபட, அது கைகலப்பில் முடிந்திருக்கிறது. இரு தரப்பிலும் ரத்தக் கசிவாம். தனது காயத்திற்கு சிகிச்சை பெற வடபழனியில் இருக்கும் சூர்யா மருத்துவமனைக்கு வந்தார் சந்தானம். அவர் அங்கிருப்பதை அறிந்த பில்டரின் ஆட்கள் மருத்துவமனையை முற்றுகையிட, அங்கிருந்து தப்பித்திருக்கிறார் சந்தானம்.
கடைசி நிலவரப்படி சந்தானம் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு தொடர்ந்து அவரை தேடி வருகிறது போலீஸ்.
கொடுத்த காசை தட்டிக் கேட்கலாம். அதுக்காக இவ்வளவு வேகமாகவா தட்டுவீங்க சந்தானம்?