கட்டிங்…. ஒட்டிங்… ஃபிட்டிங்! கச்சிதமாக்கிய சுசீந்திரன்!
“விமர்சனம் என்பது அவனவன் தனிப்பட்ட கருத்து. அதுகெல்லாம் ரீயாக்ட் பண்ணிகிட்டிருந்தா ஒரு பய படம் எடுக்க முடியாது”. இப்படி சொல்லும் இயக்குனர்கள் பெருகிவரும் காலமிது. ஆனால் விமர்சகர்களின் கருத்தை செவிக்குள் வாங்கி மண்டைக்குள் ஏற்றிக் கொள்கிற விஷயத்தில், சுசீந்திரனுக்கு கோவில் கட்டி கும்பிடலாம்.
சமீபத்தில் வெளிவந்த சுசீந்தினின் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம், தற்போது சுமார் முப்பது நிமிடங்கள் நீக்கப்பட்டுள்ளது. அவ்வளவு ஏன்? படத்தில் ஹீரோயின் போர்ஷனே முற்றிலும் ஸ்வாகா! எல்லாவற்றுக்கும் காரணம் விமர்சனங்கள்தான். ஆமா… இந்தப்படத்துல ஹீரோயினுக்கு ஒரு வேலையுமே இல்லையேப்பா… என்று இவர்கள் முணுமுணுத்ததை அப்படியே ஏற்றுக் கொண்ட சுசீந்திரன், கதாநாயகி மெஹ்ரீன் போர்ஷனை நறுக்கிவிட்டார். இதற்காக அவரிடம் பொதுவெளியில் மன்னிப்பும் கேட்டு விட்டார். 15 நாட்கள் இப்படத்தில் நடித்துக் கொடுத்தாராம் மெஹ்ரீன். (உன் தியாகத்துக்காக சுசீயின் அடுத்த படத்தில் நீதாம்மா ஹீரோயின்)
மெல்ல திறந்தது கதவு, பன்னீர் புஷ்பங்கள், குஷி, வெயில் மாதிரி படங்கள் எல்லாம் ரிலீசுக்கு பிறகு அரை மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதனால் சினிமாவில் இது ஒண்ணும் புதுசு இல்லே என்றும் கூறுகிறார் சுசீ.
ஒரு மணி நேரம், 50 நிமிஷம் மட்டுமே ஓடப் போகும் இப்படத்தை மீண்டும் பார்த்து கருத்துச் சொல்லுங்க கண்மணிகளே….