வரிசையா போட்டுத்தள்ளு… விஷாலின் கொடூர முடிவு?
பல்லவ நாட்டு ராஜகுமாரன் பக்கத்து நாட்டுக்கு படையெடுக்கப் போவது போல, சொந்த சங்கத்திற்கே இராணுவ கவசத்தோடு வர வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திவிட்டது சூழ்நிலை. வஞ்சகம்… வன்மம்… பூட்டு… என்று ஃபுல் வெறுப்பில் போய் கொண்டிருக்கிறது தயாரிப்பாளர் சங்கத்தின் தன்மான வெப்பநிலை.
விஷாலுக்கு எதிர் கோஷ்டி, தயாரிப்பாளர் சங்கத்தின் இரண்டு ஆபிஸ்களிலும் பூட்டு போட்டுவிட்டு போய்விட, அதை உடைக்கக் கிளம்பிய விஷாலுக்கு ஆறு மணிநேர ரிமாண்ட். ஒரு கல்யாண மண்டபத்தில் தன் சிறைவாசத்தை அனுபவித்துவிட்டு அன்று இரவே திரும்பிய விஷால், நிமிஷமும் தாமதிக்காமல் உயர்நீதிமன்றத்திற்கு போனார். ‘யாருய்யா உங்களுக்கு பூட்டு போடுற அதிகாரத்தை கொடுத்தது? திறந்துவிடு’ என்று கூறியது உயர்நீதிமன்றம். கடைசியில் செட் தோசையாக வரவேண்டிய சந்தோஷத்தில் ஒரு தோசை காக்கா வாயில்.
ஏன்? சங்கத்தை திறந்துவிடச் சொன்ன நீதிமன்றம், கணக்கு வழக்கு பைல்களை மாவட்ட பதிவாளரிடம் ஒப்படைக்க சொல்லிவிட்டது. எதிரணியினர் சொன்னதைப் போல விஷால் தரப்பு சங்கப்பணத்தில் ‘கை’வைத்திருந்தால் நடவடிக்கை உறுதி.
இதற்கிடையில் அன்று இரவே தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழுவை கூட்டிய விஷால், அதிரடியாக பதினெட்டு உறுப்பினர்களுக்கு ஷோ காஸ் நோட்டீஸ் கொடுத்திருக்கிறார். இந்த பதினெட்டு பேரும் பூட்டுப்போடும் வைபவத்தில் ஈடுபட்டவர்களாம்.
முறையான பதில் வந்தாலும், ‘சங்கத்தை விட்டு நீக்கதான் போகிறார். நீக்கு பார்க்கலாம்’ என்று நெஞ்சை நிமிர்த்துகிறது எதிர்கோஷ்டி.
ஆளுங்கட்சியே கையில் இருந்தால் அதிகார சிரிப்பு இப்படிதான் இருக்குமோ?