விஷாலின் மெகா முயற்சி அவுட்! குட்டையை குழப்பியது தியேட்டர் வட்டாரம்!

தமிழ்நாட்டு நண்டு கதை உலக பிரசித்தம். இப்போதும் அப்படியொரு நண்டு பேமிலிக்குள் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு ஆனந்தப்படுகிறதோ என்று டவுட்டை கிளப்பியிருக்கிறது விஷாலின் அறிவிப்பும், அதற்கு தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு கொடுத்த கவுன்ட்டர் கல்வீச்சும்!

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், மே 30 ந் தேதியிலிருந்து காலவரையற்ற ஸ்டிரைக் என்று அறிவித்துவிட்டார் விஷால். ‘ஷுட்டிங் இல்லை. படங்கள் தொடர்பான போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் இல்லை. படங்கள் ஓடும் தியேட்டருக்கும் பூட்டு‘ என்று அவர் அறிவித்த அறிவிப்பு, அவியலாக வெந்து, அப்பளமாக நசுங்கிவிடும் போலிருக்கிறது. விஷாலின் அறிவிப்பில் முதல் பாறாங்கல்லை போட்டுவிட்டது தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பும், திரையரங்க உரிமையாளர் சங்கமும்.

“யார் சொல்லியும் நாங்கள் கேட்கப் போவதில்லை. மே 30 ந் தேதி தியேட்டர்கள் இயங்காது என்பதை பொதுமக்கள் நம்ப வேண்டாம். எல்லா தியேட்டர்களும் திறந்தே இருக்கும்” என்று அறிக்கை வெளியிட்டு விட்டார்கள்.

தியேட்டர்கள் இயங்காமலிருந்தால்தான் அது மக்கள் மத்தியில் கேள்வி எழுப்ப ஏதுவாக இருக்கும். தியேட்டர்களில் இருந்து அரசுக்கு செலுத்தப்படும் வரியும் போய் சேராது. அரசின் பார்வை நம் மீது விழும் என்றெல்லாம் கணக்குப் போட்ட விஷாலுக்கு, அவ்வளவும் வீண். இருந்தாலும், “நினைத்ததை வெல்வோம். ஆயிரம் தடைகள் வந்தாலும் முறியடிப்போம்” என்கிறாராம் அவர்.

எப்படி என்பதுதான் யாருக்கும் தெரியாத புதிராக இருக்கிறது!

https://youtu.be/vK-eCBcSdp4

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ரஜினி தனிக்கட்சி தொடங்குவார்! பிரபல ஜோதிடர் கணிப்பு!

Close