ரஜினியால் வாழ்ந்தவர்கள்! யாரை தாக்குகிறார் தனுஷ்?
‘காலா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா, பலரும் எதிர்பார்த்தது போலவே சீறும் சிறப்புமாக நடந்து முடிந்துவிட்டது. வழக்கம் போல ஒரு அரங்கத்தில் விழாவை நடத்தி, பார்வையாளர்களின் முதுகில் பாறாங்கல்லை ஏற்றாமல், சற்று தாராளமாக ஒரு பிரமாண்ட மைதானத்தில் இந்த விழாவை நடத்தியிருந்தார் தனுஷ். தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான ரஜினி காவலர்களும் பிரசன்ட் ஆகியிருந்தார்கள்.
‘நான் என் வாயால திட்ட மாட்டேன். நீ திட்டு, வேற யாரெல்லாம் திட்றாங்களோ, அவங்களை விட்டு திட்ட சொல்லு’ என்பது கோடம்பாக்கத்தின் அரசியல் ட்ரிக்குகளில் ஒன்று. ரஜினி சொல்லி நடந்திருக்க வாய்ப்பு இல்லை. தனுஷே அந்த வேலையை பார்த்துக் கொண்டார்.
தனது உரையில், “ரஜினியால் வாழ்ந்தவர்கள் அவர் வாழ வைத்தவர்கள் எல்லாம் அவருக்கு எதிராக பேசி வருகிறார்கள்” என்று கூற, தனுஷ் யாரை சொல்கிறார் என்று பலருக்கும் டவுட்.
அவர் பாரதிராஜாவை சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை. ஏனென்றால், ரஜினி வளர்கிற காலத்தில், பாரதிராஜா தன் 16 வயதினிலே படத்தை வெளியிட்டு அவரை விட முக்கிய நபராக வந்துவிட்டார். அதற்கப்புறம் ஆறேழு தொடர் ஹிட்டுகள் கொடுத்தும் விட்டார். ‘கொடி பறக்குது’ பாரதிராஜா இறங்குமுகத்தில் இருந்த போது எடுக்கப்பட்ட படம். எனவே இவரால் அவர் வாழ்ந்தார் என்பது முற்றிலும் தவறு.
சீமானையும் சொல்லியிருக்கப் போவதில்லை. ஏனென்றால், சீமானுக்கும் ரஜினிக்கும் சிறு அளவுக்குக் கூட சினிமா தொடர்பு இருந்ததில்லை.
அப்படியென்றால் யார்? சாட்சாத் சத்யராஜ்தான். என்னம்மா கண்ணு… என்று இன்றளவும் மேடைகளில் வாய் சவடால் போட்டு வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் சத்யராஜ், அது ரஜினி படத்தில் தான் பேசிய டயலாக் என்பதை மட்டும் வசதியாக மறந்துவிட்டார். அதற்கப்புறம்தான் அவர் ஹீரோவாக முன்னேற முடிந்தது. அதுமட்டுமல்ல… சற்று தரக்குறைவாகவும் ரஜினியை விமர்சித்து வருபவர் சத்யராஜ்தான். எனவே தனுஷ் சொன்னது சத்யராஜைதான் என்பது தெள்ளந் தெளிவாக புரிகிறது.
பேசுறவங்க பேசட்டும்… நாம பாட்டுக்கு செவுட்டு நண்டு கதையா போய்கிட்டே இருக்க வேண்டியதுதான் என்றார் ரஜினி.
உலகத்திலிருந்து தன்னை தொலைத்துக் கொள்கிறவன்தான் ஞானி. அந்த விஷயத்தில் மட்டும் ரஜினி, ஞானிக்கெல்லாம் ஞானி!
ரஜினியால் வாழ்ந்தவர்கள்! யாரை தாக்குகிறார் தனுஷ்?
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களால், வாழ்வு பெற்றவர்களின் மனச்சாட்சிக்கு தான் அது தெரியும்.
யார் ஏசினாலும், யார் பேசினாலும், தமிழக மக்களின் அன்போடும் ஆதரவோடும், தலைவர் ரஜினி அவர்கள் தமிழகத்தின் முதல்வர் ஆவது நிச்சயம்