போப் ஆண்டவரிடம் ஆசி! இஸ்ரேல் கிளம்பினார் பிரபுசாலமன்! (என்னது…ரயில்ல போறீங்களாவா?)
உலகம் முழுக்க 2000 ஸ்கிரீனிங்! தமிழ்நாட்டில் 400 ஸ்கிரீனிங் என்று பிரமாண்டமாக ரிலீஸ் ஆன தொடரிக்கு கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்க, ‘படத்தை எடுத்தேன். பார்க்கக் கொடுத்தேன். அதற்கப்புறம் எல்லாவற்றையும் அந்த ஜீசஸ் பார்த்துக் கொள்வார்’ என்று கிளம்பிவிட்டார் பிரபுசாலமன். எங்கே தெரியுமா? இஸ்ரேலுக்கு! அங்கிருக்கும் ஜெருசேலம் என்ற ஊரில்தான் ஏசு பிறந்தார். உலகக் கிறிஸ்தவர்கள் எல்லாம் ஒன்று கூடி வணங்கும் இடம் என்பதால்!
அப்படியே ரோம் சென்று போப் ஆண்டவரை தரிசிக்கும் எண்ணமும் இருக்கிறதாம். தொடரி நல்லபடியாக ஓட வேண்டும். தன் பெயரை சேதப்படுத்திவிடக் கூடாது என்றெல்லாம் பிரார்த்தனைகள் இருக்கலாம். வெறும் பிரபுவாக இருந்தபோது, சில படங்களை இயக்கியவர் அதற்கப்புறம் சாலமனை சேர்த்துக் கொண்ட பிறகுதான் மைனா வந்தது. தாறுமாறான வெற்றி. அதற்கப்புறம் எங்கு மைக் பிடித்தாலும், ‘தேங்க்யூ ஜீசஸ்’ என்று சொல்வதையே வழக்கமாக வைத்திருந்தார். இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவுக்கு வந்தவர், தனது டி.ஷர்ட்டில் ‘ஐ லவ் யூ ஜீசஸ்’ என்ற வாசகங்களை பொறித்திருந்தார். ஆண்டவர் ஆசிர்வதிக்கட்டும்…
‘தொடரி’ பற்றிய முக்கியமான செய்தி ஒன்று. படம் வெளியான ரெண்டாவது நாள் முடிவில் பதினொரு கோடி வசூல் செய்திருக்கிறதாம். ரயிலை பார்க்க குழந்தைகளும், தனுஷை பார்க்க குடும்பங்களும் கூட்டம் கூட்டமாக கிளம்பியதால், இந்த வார இறுதிக்குள் இன்னும் முப்பது கோடியை சர்வ சாதாரணமாக எட்டுவோம் என்கிறார்களாம் விநியோகஸ்தர்கள்! இது தனுஷின் 30 வது படம் என்பதையும் குறிச்சு வச்சுக்கோங்க சாமியோவ்!