டைரக்டர் ஷங்கரின் கதையை ‘கெடுக்க’ பார்க்கிறார் அர்ஜுன்?
புரட்டிப்போடாத தோசையைக் கூட ‘ஆப்பம்’ என்று கூறி அகமகிழ்வான் தமிழன். அப்படிப்பட்ட ஆப்பத்தையே ஏப்பம் விடுகிற அளவுக்கு அவற்றை சிங்கிள் ஷாட்டில் முழுங்குகிற அசகாய சூரர்கள் பெருகிவிட்ட உலகமல்லவா? ரீமேக் என்ற பெயரிலும் பார்ட் 2 என்ற பெயரிலும் ஏராளமான தோசைகளை புரட்டி புரட்டிப் போட்டு நல்ல கதைகளையெல்லாம் கருக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் நம்ம ஊர் இயக்குனர்கள். இதில் வேறொருவர் இயக்கிய படத்தை தானே முன் வந்து கருக வைக்கப் பார்க்கிறார் ஆக்ஷன் கிங் அர்ஜுன்.
எப்போதும் ராஜாவான ரஜினியிடம்தான் முதல்வன் கதையை சொன்னார் ஷங்கர். ஐயய்யோ… எனக்கு ஏற்கனவே நாட்டை புடிச்சுருவாரு என்கிற இமேஜும் கெட்டப்பேரும் இருக்கு. இந்த நேரத்தில் நான் ஒருநாள் முதல்வரா இந்த படத்தில் நடிச்சா, காதால சிகரெட் பிடிப்பான் ரொம்ப பேரு. அதனால் ஆளை விடுங்க ஷங்கர் என்று ஓடியே போனார் அவர்.
அதற்கப்புறம் அப்படத்தில் நடித்தார் அர்ஜுன். அப்போது கிடைத்த வெற்றியின் ருசியை இப்போதும் நாக்கு உலரும்போதெல்லாம் சப்புக் கொட்டிக் கொண்டிருக்கிறார் அவர். அதற்கப்புறம் முதல்வன் இந்திக்கு ரீமேக் ஆனது. அங்கே அனில்கபூர் நடித்தார். படத்திற்கு நாயக் என்று பெயர் வைத்து வெளியிட்டார்கள். ஆனால் படம் படுதோல்வி. சுமார் பனிரெண்டு வருடங்களுக்கு முன் வெளிவந்த இந்த படத்தை அப்படியே ரீமேக் செய்யப் போகிறாம் அர்ஜுன். இது முதல்வன் பார்ட் டூவாக இருக்கும் என்கிறார்கள் இப்பவே.
பார்ட் டூ வை நீங்க எடுங்க அர்ஜுன். உங்களை மாதிரி பார்ட்டிகளிடம் டூ விடுவதை ஷங்கர் பார்த்துக் கொள்வார்.