வாடிகன் தேவாலயத்தில் புறாக்களைப் பாதுகாக்க பயிற்சிபெற்ற பருந்து
இத்தாலியை ஒட்டியுள்ள வாடிகன் தேவாலயத்தில் வளர்க்கப்படும் புறாக்கள் உலக சமாதானத்திற்கு அறிகுறியாக ஆண்டுதோறும் சிலமுறை பாரம்பரியமாக வெளியே பறக்கவிடப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதியன்று செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தின் மேற்புறம் உள்ள ஜன்னலின் வழியே இரண்டு குழந்தைகள் இந்தப் புறாக்களைப் பறக்க விட்டனர். அப்போது கூடியிருந்த மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அங்கு பறந்து வந்த காகமும், ஒரு கடல்பறவையும் இரண்டு புறாக்களை கொத்திச் சென்றுவிட்டன.
இந்த கொடிய தாக்குதலைப் பார்த்த மக்கள் மனம் வருந்தினர். இதனைக் கண்ணுற்ற போப் பிரான்சிஸ், இந்தப் புறாக்களை காப்பாற்ற பயிற்சி பெற்ற பருந்து ஒன்றினை இத்தாலியிலிருந்து வரவழைப்பதாக தேவாலயத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் பணிக்கென சிறப்புப் பயிற்சி பெற்ற ‘சில்வியா’என்ற பருந்து ஸ்விட்சர்லாந்து நாட்டு வீரர்களால் கொண்டுவரப்படுவதாக இன்று வெளியான அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. 120 செ.மீ. நீள இறக்கைகளைக் கொண்ட இந்தப் பருந்து, புறாக்களை அவற்றின் எதிரிகளிடமிருந்து காப்பாற்றும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.
காவல்பணியில் ஈடுபடும் இத்தகைய பருந்துகள் பொதுவாக மேற்கத்திய நாடுகளில் விமான நிலையங்களிலும், கால்பந்து மைதானங்களிலும் திரியும் புறாக்களை வெளியேற்ற பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதுபோல் இத்தாலியின் கொலோசியத்தில் உள்ள நினைவுச்சின்னங்களின் மீது புறாக்கள் எச்சமிடுவதைத் தடுக்கும்வகையில் அவற்றை விரட்டும் பணியிலும் இவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.