6 அத்தியாயம் விமர்சனம்
ஒரு தீப்பெட்டிக்குள் அத்தனை குச்சிகளும் நமத்துப் போகாமலிருந்தால் எப்படியிருக்கும்? அப்படியொரு ஆசையை தூண்டுகிற படம்தான் 6 அத்தியாயம். 6 கதைகள்… ஆனால் வரிசையாக ஒரே ஸ்கிரீனில்! படம் ஓடுகிற ரெண்டு மணி நேர சொச்சத்தில், கொஞ்சத்தை கழித்துவிட்டால் சுட சுட சில ஆவிப்படங்கள் தயார்.
பெட்ரோலுக்கு பதிலாக ஆவி, பேய், பில்லி சூனியங்களை நிரப்பிக் கொண்டு ஓட ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கம் வண்டி. இதில் ஒண்டியாளாக இல்லாமல் ஆறு டைரக்டர்கள் இணைந்து ஆவிகளை இறக்குமதி செய்திருப்பதே வித்தியாசம்தான். முடிந்தவரை சாகடிக்காமல் காப்பாற்றி அனுப்பி வைக்கிறார்கள்.
அதிலும் ஐந்தாவதாக வரும் ‘சூப்பர் பாய் சுப்பிரமணி’ கதை, தியேட்டரை கலகலப்பாக்குகிறது. காதலியை சந்திக்கும் போதெல்லாம் ஏடாகூடமாக சில விஷயங்கள் நடக்க… ‘அட பொறுக்கிப் பயலே’ என்று தெறித்து ஓடுகிறார்கள் காதலிகள். கடைசியில் பார்த்தால் ஹீரோவுக்கே தெரியாமல் அந்த வேலையை செய்கிறது ஆவி. அது யாருடைய ஆவி என்பதுதான் கெக்கேபிக்கே! படத்தில் வரும் டபுள் மீனிங்கை அசிங்கப்படாமல் ரசிக்க வைத்திருக்கிறார் டைரக்டர் லோகேஷ் ராஜேந்திரன்.
ஆறாவது கதையான ‘சித்திரம் கொல்லுதடி’ அட்சரம் பிசகாத திகில் சமாச்சாரம். கோகிலா என்றொரு ஆவி, பழைய புத்தகம் வாங்கப் போன கடையிலிருந்து வீட்டுக்கு வந்துவிடுகிறது. அது படுத்தும் பாடுதான் படம். கிடைத்த 30 நிமிஷங்களுக்குள் தன் திறமை மொத்தத்தையும் இறக்கி வைத்து, முக்கிய முகவரியாளர்கள் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன். தயாரிப்பாளரும் இந்த கதைக்கு மட்டும் கொஞ்சம் கூடுதல் செலவு பண்ணியிருக்கிறார்.
கேபிள் சங்கர் இயக்கியிருக்கும் அந்த முதல் கதையான ‘சூப்பர் ஹீரோ’-வில், ‘அடுத்தது என்னப்பா…?’ என்கிற ஆர்வம் தெளிக்கப்பட்டிருக்கிறது. கடைசி ‘பிரேக் சவுண்ட்’ வரை அதை காப்பாற்றியிருக்கிறார் அவரும். தனக்கு வந்திருப்பது வியாதியா, சூப்பர் பவரா? என்று கன்பியூஸ் ஆகி கலங்கும் வேடத்தில் தமன்குமார் பிரமாதப்படுத்துகிறார்.
மற்ற கதைகளெல்லாம் குமுதம் மற்றும் வார மலர்களில் வந்த ஒரு பக்கக் கதைகளை போல சிம்பிள்! வெரி சிம்பிள்…
இந்த ஆறு கதைகளுக்கும் பொன்.காசிராஜன், அருண்மணி பழனி, அருண்மொழி சோழன், மனோ ராஜா என்கிற ஒளிப்பதிவாளர்கள் உழைத்திருக்கிறார்கள். கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருப்பது ‘பளிச்’சென தெரிகிறது.
இசையமைத்த தாஜ்நூர், ஜோஷ்வா, ஜோஸ் ப்ராங்க்ளின், சதீஷ் குமார் ஆகியோரின் பின்னணி இசை முற்றிலும் ஸ்பெஷல்.
பித்து பிடித்து அலையும் கோடம்பாக்கத்தின் ஆவி ஆசையை, காலி பண்ணுகிற அளவுக்கு மோசமான படங்கள் வந்தாலும், கான்பிடன்ட் குறையாமல் அதே ஆவிகளுக்கு ‘ஆயுள் நீட்டிப்பு’ செய்திருக்கிறார்கள் இந்த ஆறு இயக்குனர்களும்.
ஆறு கதைகளுக்கும் சேர்ந்தார் போல ஒரே க்ளைமாக்சாக இருந்திருந்தால் இந்தப்படத்தின் ரேஞ்சே வேறு லெவலுக்கு மாறியிருக்கும்.
இருந்தாலும், கார்த்திக் சுப்புராஜ் கை வைத்தும் முடியாமல் சொதப்பிய ‘ஆந்தாலஜி’ ஸ்டைல் படங்களின் தோல்வியை ஒரு நாயின் ஆவி காலி பண்ணிய கொடுமையை எங்கு போய் சொல்வது?
-ஆர்.எஸ்.அந்தணன்