மீண்டும் உங்களை போயஸ் கார்டனில் கண்டதில் மகிழ்கிறேன்! ஜெ.வுக்கு ரஜினி வாழ்த்து
ஜெயலலிதா சிறைக்கு போய்விட்டார். அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்றெல்லாம் அரசியல் விமர்சகர்கள் கூறிக் கொண்டிருக்க, அந்த வெற்றிடத்தை ரஜினி வந்து நிரப்பப் போகிறார் என்று இன்னொரு பக்கம் தீயாய் பரவியது வதந்தி. அதற்கு மேலும் வலு சேர்ப்பது போல பிஜேபி யும் விடாமல் ரஜினியை துரத்திக் கொண்டிருந்தது. கடைசியாக ‘நீங்க வாய்ஸ் கொடுத்தா போதும்’ என்ற நிலையில் வந்து நின்றது அந்த முயற்சி.
இந்த நேரத்தில்தான் வெற்றிடம், வெற்றி இடம் என்றெல்லாம் வார்த்தை ஜாலம் காட்டிய பி.ஜே.பி தலைமைக்கு விக்ஸ் டப்பா வாங்கி அனுப்பியிருக்கிறார் ரஜினி. எப்படி? சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருக்கிறார். இது ஒரு அரசியல் நாகரீகம். சீரியசாக எடுத்துக் கொள்ள தேவையில்லை என்றே கருதினாலும், இந்த அரசியல் நாகரீகத்தை உடனடியாக செய்கிற துணிச்சல் யாருக்கும் இல்லையே? அந்த வகையில் முதல் நம்பிக்கை வார்த்தைகள் ரஜினியிடமிருந்து வந்திருப்பதுதான் சிறப்போ சிறப்பு.
இன்று அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பு ஒன்றில் ரஜினி ஜெயலலிதாவுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், “மீண்டும் உங்களை போயஸ் கார்டனில் கண்டதில் மகிழ்கிறேன். உங்களின் நலனுக்காக பிரார்த்திப்பதுடன், வளத்துக்கும், ஆரோக்கியத்துக்கும் வாழ்த்துகிறேன்… என்று எழுதியிருக்கிறார் ரஜினி.
இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரான கலைஞரை மட்டுமல்ல, இந்தியாவின் துணிச்சல் தலைவரான ஜெயலலிதாவையும் அனுசரித்த விதத்தில், தான் ஒரு நடுநிலையாளர் என்பதை மீண்டும் நாட்டுக்கு உணர்த்தியிருக்கிறார் ரஜினி.
பாராட்டுகள்!


