சந்தானம் வேணும்! ஆசைப்படுகிறார் அஜீத்!

சந்தானம் ஹீரோவான நாளில் இருந்தே, ஒட்டடை படிந்து உருத்தெரியாமல் போகின்றன பல யங் ஹீரோக்களின் படங்கள்! சந்தானம் இல்லேன்னா என்ன? சதீஷ், கருணாகரன், இடிச்சப்புளி ஜெகன், கொடுக்காப்புளி கோவிந்தன் என்று இருக்கிறவங்களை வச்சு சமாளிச்சுக்கலாம் என்று கணக்கு போட்டவர்களுக்கு, அசலும் தேறவில்லை. அண்டாவும் கொதிக்கவில்லை. இந்த நேரத்தில் அந்த வடிவேலுவும் முறுக்கிக் கொண்டதால், அல்மோஸ்ட் ரிட்டையர் ஆன விவேக்கை மீண்டும் கெஞ்ச வேண்டிய நிலைக்கு ஆளானது இன்னொரு கூட்டம்.
இன்டஸ்ட்ரியை விட்டு விலகியிருப்பது போல பாவனை செய்து கொண்டிருந்தாலும், இங்கு நடக்கிற எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார் அஜீத். சந்தானம் இல்லா படங்களை சர்வ வேதனையோடு பார்த்து வரும் ரசிகர்களின் மனோபாவமும் அவருக்கு புரிந்திருக்கிறது. தன் அடுத்த படத்தை இயக்கவிருக்கும் சிவாவிடம், “இந்த படத்தில் சந்தானம் இருந்தா நல்லாயிருக்கும். பேசிப் பாருங்களேன்” என்றாராம். தேவைப்பட்டால், அவரே சந்தானத்திடம் பேசுகிற மூடில் இருப்பதாகவும் காதை கடிக்கிறது இன்டஸ்ட்ரி.
நம்ம போட்ற எருவை வச்சுதான் இன்னொரு மரம் வளருது. நாமளே மரமா வளர்ந்து மாங்காவா கொட்டுனா என்ன என்று நினைத்திருந்த சந்தானம், அஜீத்திற்காக இறங்கி வருவாரா? இல்லையென்றால், “நான் ஹீரோ நான் ஹீரோ” என்று கதவை குளோஸ் பண்ணிவிட்டு, காயத்ரி மந்திரம் படிப்பாரா?
இன்னும் விடை தெரியாமலே சுற்றிக் கொண்டிருக்கிறது அஜீத்தின் சந்தான வரவேற்பு!
