ஆமா… அதுக்கென்ன இப்போ? விஜய்சேதுபதி கேள்விக்காக எகிறிய நடிகை!

பிரிக்க முடியாதது என்னவோ? என்றால், நாகேஷும் நகைச்சுவையும் என்பது மாதிரிதான் இந்த ஜோடியும் இருக்கிறது. கோடம்பாக்கத்தில் எத்தனையோ கிசுகிசுக்கள் வந்தாலும், அதெல்லாம் வந்த வேகத்தில் மறைந்துவிடும். “இவனுங்க எழுதி தொலையுறானுங்க. அதனாலேயே அந்த பெண்ணை இந்த படத்தில் வேணாம்னுட்டேன்” என்று கூறுகிற எத்தனையோ ஹீரோக்கள், சந்து மறைவில் சலாம் போடுகிற நிலை இன்னும் தொடர்கிறது.

விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷ் விஷயத்தில் அந்த நாணத்திற்கெல்லாம் வழியே இல்லை. “எழுதறவங்க எழுதிட்டு போகட்டும். என் படத்தில் ஐஸ்வர்யா இருக்கட்டும்” என்று தொடர்ந்து வாய்ப்பு வழங்கி வருகிறார் விஜய்சேதுபதி. இந்த நிலையில் சேதுபதி இல்லாமல் ஒரு படத்தில் ஐஸ்வர்யா நடித்திருக்கிறார். அப்படத்தின் பெயர் மோ.

அதென்னங்க ‘மோ’? என்ற கேள்வியுடன் டைரக்டர் புவன் ஆர் நல்லன் என்ற இளைஞரை சந்தித்தோம். “அது தமிழ் பெயர்தான்” என்றார் பலரும் திடுக்கிடும் விதத்தில். படம் பாருங்க. புரியும் என்று கூறிவிட்டு கதை பற்றி இரண்டு வரிகளோடு நிறுத்திக் கொண்டார். “பழைய கட்டிடங்களை கம்மி விலைக்கு வளைத்துப் போடும் மைம் கோபி, பேய் பங்களா என்றால் அதில் கை வைக்கவே யோசிப்பார். அவரது பார்வையில் ஒரு பழைய பள்ளிக்கூடம் சிக்குகிறது. அவர் விலைக்கு வாங்கக் கூடாது என்பதற்காகவே துணை நடிகை ஐஸ்வர்யாவை வைத்து அந்த பள்ளிக் கூடத்தில் பேய் இருப்பதாக கதை கட்டுகிறார்கள் ரமேஷ் திலக், யோகிபாபு ஆகிய நண்பர்கள். பார்த்தால்…? நிஜமாகவே அங்கு பேய் இருக்கிறது. இவர்கள் என்ன செய்தார்கள் என்பதுதான் கதை” என்றார் புவன்.

பக்கத்திலேயே இருந்த ஐஸ்வர்யா ராஜேஷிடம், என்னங்க… இந்தப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கலையா? என்று கேட்டதுதான் தாமதம். பொங்கிவிட்டார் பொங்கி. ஆமா சார்… எனக்காக கதை கேட்கிறவரே அவர்தான், போதுமா? என்றார் பெரும் கோபத்துடன்.

பேயாக நடித்ததிலிருந்தே இப்படி போல்டாக எதையும் எதிர் கொள்கிறார் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். வேறென்ன செய்ய?

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அறிமுக இயக்குனரின் படம்! மார்க் போட்ட சுந்தர்சி!

Close