சசிகலா அஜீத் சந்திப்பு? ஊடகங்களின் உளறல்! சிக்க வைக்கப்பட்டாரா அஜீத்?

அஜீத்திற்கும் அதிமுக வுக்குமான தொடர்பு பெரிதாக இல்லை. ஆனால் அஜீத்திற்கும் அதிமுகவின் தலைமையான ஜெயலலிதாவுக்குமான நட்பும் அன்பும் கொஞ்ச நஞ்சமல்ல. மன்சூரலிகான், விந்தியா மாதிரியான சுமார் ஸ்டார்களையே தன் வீட்டுக்கு வரவழைத்து பேசியிருக்கும் ஜெ. அஜீத் குடும்பத்தை எத்தனை முறை வரவழைத்திருப்பார்? அரசல் புரசலாக வெளியில் தெரிந்த இந்த சந்திப்புகளால், அதிமுகவின் அடுத்த வாரிசே அஜீத்துதான் என்று கூட ஊடகங்கள் பேசி வந்தன.

தமிழில் வெளிவரும் ஒரு முக்கியமான வார இதழ் கூட, சாவின் விளிம்பில் இருந்த ஜெயலலிதா அந்த கடைசி நேரத்தில் அஜீத்தை சந்திக்க விரும்பியதாக ஒரு தகவலை பரப்பியது. திடீரென ஜெயலலிதா இறந்ததை தமிழக மக்களால் எப்படி ஜீரணித்துக் கொள்ள முடியவில்லையோ, அப்படிதான் அஜீத்தாலும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. கோடம்பாக்கத்தில் நடந்த எத்தனையோ மரணங்களை கண்டும் காணாமலும் இருந்த அஜீத், இந்த முறை ஓடோடி வந்தார்.

இதோடு முடிந்தது போயஸ் கார்டனுக்கும் அஜீத்திற்குமான தொடர்பு. ஆனால் இன்று இரவு பிரபல தொலைக்காட்சிகள் சிலவற்றிலும், இணையதளங்கள் சிலவற்றிலும் சசிகலாவை அஜீத் போயஸ் கார்டனில் சந்தித்துப் பேசியதாக செய்திகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து தமிழகமெங்கும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. சூடோடு சூடாக அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவை தொடர்பு கொண்டு விசாரித்தால், அப்புறம்தான் தெரிந்தது அவ்வளவும் டுபாக்கூர் என்று.

இந்த தகவலை மறுத்த சுரேஷ் சந்திரா, “யாரு கிளப்பிவிட்டாங்கன்னே தெரியல. அஜீத் சார் வீட்லதான் இருக்கார். எங்கும் போகல” என்றார்.

இந்த தகவல் சசிகலாவின் ஆதரவாளர்கள் சிலரால் கிளப்பிவிடப் பட்டிருக்கலாம் என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. காரணம்… பொதுக்குழுவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு விஷயம் பரவினால், சசிகலாவுக்கு எழுந்திருக்கும் கொஞ்ச நஞ்ச எதிர்ப்பும் பிசுபிசுத்துப் போகுமல்லவா? அதனால்தானாம்.

மடிப்பாலுக்கு ஆசைப்பட்டு மட்டிப்பாலை குடிச்ச மாதிரியிருக்கேய்யா இது?

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Dhurvangal Pathinaaru Movie Teaser

https://www.youtube.com/watch?v=07tHpu85uOA

Close