ஒருபுறம் துள்ளல்! மறுபுறம் அல்லல்! எல்லாம் இந்த அட்லீயால வந்தது!
முனியாண்டி கோவில் உடுக்கை போல சாமி வர வைத்துவிட்டது அட்லீயின் யுக்தி. விஜய்யை இவ்வளவு ஸ்மார்ட்டாகவும், போல்டாகவும், நடமாடும் பீரங்கியாகவும் காட்டினால்தானே ரசிகர்களுக்கு பிடிக்கும்? அவர்களின் மனசை ஸ்கேன் செய்து பார்த்த மாதிரி ஒரு படத்தை எடுத்துக் கொடுத்துவிட்டார். ஆனால் படத்தை எடுத்த தயாரிப்பாளர் என்னவானார்?
அவருக்கென்னப்பா… ராஜா மாதிரி ஜம்முன்னு துட்டை எண்ணி பேங்குல போட வேண்டியதுதானே என்றுதானே கேட்கிறீர்கள்? அங்குதான் ஊரு பட்ட உபத்திரம்.
படத்தின் பட்ஜெட்டை பிளான் பண்ணியதை விட பல மடங்கு ஏற்றிவிட்டாராம் அட்லீ. முக்கியமாக படத்தில் நடித்த நடிகர் நடிகைகளுக்கு வழங்கப்பட்ட சம்பளம். அட்லீயின் வற்புறுத்தலுக்கு இணங்க, எஸ்.ஜே.சூர்யாவுக்கு 4,5 கோடி. சத்யராஜுக்கு 2.5 கோடி, அட்லீக்கே 12 கோடி என அதுவே பெரும் நோட்டுகள் பலவற்றை தின்றுவிட, மிச்ச மீதி செலவுகளுக்குள் அடங்கிய செட், டெக்னீஷியன்கள் சம்பளம், படம் எடுக்கப்பட்ட நாட்கள், எல்லாவற்றையும் கணக்கில் எடுத்தால், கிட்டதட்ட 145 கோடி ரூபாயை தொட்டுவிட்டதாம். தயாரிப்பு செலவு.
ரிலீசுக்கு முதல் நாள் சுமார் 40 கோடியை புரட்டுவதற்கு படாதபாடு பட்டுவிட்டாராம் தயாரிப்பாளர். அதுமட்டுமல்ல… க்யூப் மூலம் தியேட்டர்களுக்கு படம் திரையிட வேண்டும் அல்லவா? பொதுவாக ஒரு வார பணத்தை க்யூபுக்கு கட்டுவதுதான் வழக்கம். ஆனால் இவரோ முதல் ஒரு நாளுக்குதான் பணம் கட்ட முடிந்ததாம். அதற்கப்புறம் நாள்தோறும் வருகிற கலெக்ஷனை வாங்கிதான் கட்டி வருகிறாராம்.
ஜி.எஸ்.டி வரி, கேளிக்கை வரி, தியேட்டர் கமிஷன் போகதான் தயாரிப்பாளர் கைக்கு பணம் வரும். அப்படியென்றால் படம் 200 கோடியாவது கலெக்ஷன் செய்தால்தான் தயாரிப்பு செலவை லாபத்தோடு மீட்க முடியும்.
நல்லவேளையாக படத்தை சிறப்பாக எடுத்துக் கொடுத்துவிட்டார் அட்லீ. இல்லையென்றால் நிலைமை என்னாகியிருக்கும்!
முதலில் படம் கமிட் ஆகும்போது ஒரு பட்ஜெட்டை சொல்வது. அதற்கப்புறம் அதை இரண்டு மடங்காக ஏற்றிவிடுவது என்று அட்லீ மீது ஆயிரம் குறைகளை சொல்லி வருகிறது திரையுலகம். அடுத்த படத்திலாவது தன் குறைகளை களைந்து கொள்ள வேண்டும் அட்லீ. செய்வாரா?