சாருக்கு ஒரு செவாலியேர் பார்சேல்!
அரைச்ச மாவையே அரைச்சு துவைச்ச துணியவே துவைச்சு பெயர் வாங்கும் புலவர்கள் இருக்கும் தமிழ்சினிமாவில், கொஞ்சம் வித்தியாசமா, சொசைட்டிக்கு கருத்து சொல்ற மாதிரிதான் படம் எடுப்போமே என்று நினைக்கிற இயக்குனர்கள் குறைவோ குறைவு! அவர்களை சொசைட்டி மதிக்குதோ இல்லையோ? ரசிகர்கள் வணங்குகிறார்களோ இல்லையோ? எங்கோ இருக்கிற அமைப்புகள் மதிக்கும். வணங்கும். அப்படி மதிக்கப்பட்டிருக்கிறார் யுரேகா! (யாருன்னே தெரியலேல்ல? அதாண்டா தமிழ்நாடு)
மதுரை சம்பவம், தொப்பி, சிவப்பு எனக்குப் பிடிக்கும் போன்ற படங்களை இயக்கியவர் இவர். “பேசிக்கலாக நான் ஒரு பாதிரியார். கம்யூனிஸ்ட், எழுத்தாளன், இலக்கியவாதி, பத்திரிகையாளன்” என்று பட்டியலிடும் யுரேகா, செவாலியே விருதை பெற்றிருக்கிறார். சிவாஜிகணேசன், கமல்ஹாசன், போன்ற பல ஜாம்பவான்களுக்கு இந்த விருதை வழங்கி சந்தோஷப்பட்ட பிரான்ஸ் அமைப்புதானே இந்த விருதை கொடுத்திருக்கிறது? அதுதான் இல்லை. இந்த அமைப்புக்கும் அண்ணனாக இன்னொரு அமைப்பு இருக்கிறது.
பிரான்ஸ் நாடு வழங்கும் செவாலியே விருதுக்கு முன்பாகவே கி.பி-1048 -லிருந்து சுமார் 960 வருடங்களுக்கும் மேலாக ‘நைட் ஆப் மால்டா ஜெருசலேம்’ இந்த செவாலியேர் விருதை வழங்கி வருகிறது. இந்த அமைப்புதான் யுரேகாவுக்கு இந்த ‘நைட் ஆப் கிரேஸ் செவாலியேர்’ விருதை வழங்கியிருக்கிறது.
இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை புதிய கோட்பாடுகளுடன் எழுதினாராம் யுரேகா. அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்கள். அதற்காகதான் இந்த விருது.
“சார்… இந்த விருதெல்லாம் கிடக்கட்டும். சினிமா மூலமா மக்களுக்கு சொல்ல வேண்டியது நிறைய இருக்கு. விட மாட்டேன். யாரும் சொல்ல தயங்குற அஞ்சுகிற விஷயத்தையெல்லாம் கையில் எடுக்கப் போறேன்” என்று மிரட்டாத குறையாக பேசுகிறார் யுரேகா!
ஒருவேளை ராம்கோபால் வர்மாவுக்கு முன்னாடியே சசிகலா- ஜெயலலிதா கதையை படமாக்கிடுவாரோ?