முடிவுக்கு வந்த ஸ்டிரைக்! விஷாலுக்கு கிடைத்தது வெற்றியா தோல்வியா?

‘கரும்பு மிஷின்ல இரும்பை விட்டுட்டு சாறு வரும்னு காத்திருக்காங்க. சாறும் வரப்போவதில்லை. மோரும் வரப்போதில்லை’ என்று சொல்லி வந்த அத்தனை பேருக்கும், விஷாலின் ஒன்றரை மாத போராட்டம் வெற்றிகரமாக முடிந்ததில் சொல்லொணா துயரம். யெஸ்… வென்றார் விஷால்!

பெப்ஸி தொழிலாளர்களும் இந்த வேலை நிறுத்தத்திற்கு உடன் பட்டதுதான் இனிய அதிர்ச்சி. (வேறு வழியில்லை என்றாலும்) நடுவில் இந்த வேலை நிறுத்தத்தை ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்று துடியாய் துடித்தவர்கள், குறுக்கே பூரானையும் பாம்பையும் விட்டுப் பார்த்ததெல்லாம் தனிக்கதை.

நேற்று அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, கே.சி.வீரமணி தலைமையில் நடந்த முத்தரப்பு பேச்சு வார்த்தைக் கூட்டத்தில் ஒரே காச் மூச். நல்லவேளை… முடிவு சுபம்!

விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

1. க்யூப் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்பது முதல் கோரிக்கை. முடிந்தால் அவர்களை முழுசாக விரட்டியே தீர வேண்டும் என்பதுதான் அதிலும் முக்கியமாக இருந்தது.

தீர்வு- ஆந்திரா, கர்நாடகா என்று ஆங்காங்கே நடந்த பேச்சு வார்த்தைகயில் வெறும் 8 சதவீதம் மட்டுமே கட்டண குறைப்புக்கு முன் வந்த க்யூப் நிறுவனம், இப்போது 50 சதவீதம் குறைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல… ஆறு மாதங்கள் மட்டும்தான் ஒப்பந்தம் செல்லும். அதற்கப்புறம் அவர்கள் வேண்டுமென்று தயாரிப்பாளர் சங்கம் விரும்பி தொடர்ந்தால்தான். இல்லையென்றால் அம்போ.

2. எல்லா தியேட்டர்களிலும் கம்ப்யூட்டர் வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு காட்சியிலும் எவ்வளவு பார்வையாளர்கள் இருக்கிறார்கள் என்பதையும், எத்தனை டிக்கெட் விற்றுள்ளது என்பதையும் தயாரிப்பாளர் நேரடியாக கம்ப்யூட்டர் மூலம் அறிந்து கொள்கிற வசதி வேண்டும்.

தீர்வு- இந்த விஷயத்திற்கு ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பை காட்டிவந்த தியேட்டர்காரர்கள், நேற்றும் இந்த விஷயத்தை ஆறப்போட முயல… இறுதியில் திருப்பூர் சுப்ரமணியன் நல்லாசியுடன் உடன்பாட்டுக்கு வந்தார்கள். ஜுன் மாதத்திற்குள் எல்லா தியேட்டர்களிலும் இந்த வசதியை பொறுத்த வேண்டும் என்று அரசே தனி ஜி.ஓ போடுவதாக அறிவித்திருக்கிறார் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு.

3. சின்னப்படங்களுக்கு தனி டிக்கெட் கட்டணமும் பெரிய படங்களுக்கு தனி கட்டணமும் வேண்டும். இவ்விரு படங்கள் வெளியாகிற நேரத்தில், மூன்று பிரிவாக டிக்கெட் ரேட் அமைய வேண்டும். சிறு படங்களுக்கான டிக்கெட் ரேட்டை தயாரிப்பாளர் சங்கமே முடிவு செய்யும்.

தீர்வு- இதற்கு தியேட்டர் அதிபர்கள் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள்.

4. மாஸ்டரிங் செய்வதற்கு 25 ஆயிரமும், அதில் ஏதாவது கரெக்ஷன் என்றால் தனியாக 25 ஆயிரமும் பில் போட்டு வந்த க்யூபுக்கு ஆப்பு. மாஸ்டரிங் வசதியை தயாரிப்பாளர் சங்கமே செய்து தரும். அதுவும் வெறும் பத்தாயிரம் ரூபாயில். எத்தனை முறை கரெக்ஷன் செய்தாலும் ப்ளஸ் அமவுன்ட் இல்லை.

தீர்வு- இதற்கு க்யூப் நிறுவனம் ஒப்புக் கொண்டுவிட்டது.

5. ஆன்லைன் புக்கிங் கட்டணத்தில் பெரும் கொள்ளை. அதன் காரணமாகவும் தியேட்டர்களுக்கு கூட்டம் வருவதில்லை என்பதும் பெரும் குறையாக கருதப்பட்டது.

தீர்வு- இந்த ஆன்லைன் புக்கிங் திட்டத்தை தயாரிப்பாளர் சங்கமே செய்து கொள்வதற்கு தியேட்டர்கள் சங்கங்கள் ஒப்புக் கொண்டன.

அரசு பேச வேண்டிய இந்த முக்கியமான விஷயங்களுக்கு தீர்வு கிடைத்த பின், பேச வேண்டிய பிற விஷயங்கள் குறித்து தயாரிப்பாளர் சங்கம் கூடி முடிவெடுக்கும். அப்போது எதன் அடிப்படையில் படங்களை வெளியிடுவது. எந்தெந்த தியேட்டர்களுக்கு ஆப்பு வைப்பது என்பதெல்லாம் பற்றி பேசுவார்கள்.

ஆக மொத்தம் விஷாலின் தலைமையிலான இந்த போராட்டம், எண்ணியவற்றை சாதித்த போராட்டமாகவே நிறைவடைந்திருக்கிறது. ஆமென்!

ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விஜய் செலுத்த தவறிய நன்றிக்கடன்!

https://www.youtube.com/watch?v=INvafCK-BPc&t=107s

Close