மீண்டெழுந்தார் சேரன்!

‘பணத்தை கொட்டினால் போதும். பளபளப்பு ரெடி’ என்கிற டோப்பா மேக்கர்கள் பெருகிவிட்ட காலம் இது. ஆணானப்பட்ட ஷங்கரே ஐநூறு கோடிக்கு படம் எடுத்தால் ஆ வென்று வாயை பிளப்பார்கள் என்று நம்புகிற காலம் இது. சில வருடங்களுக்கு முன்பு வரை கதையை மட்டுமே நம்பியிருந்த சினிமா, வெட்டி கூச்சலுக்கும், வெறும் வாய் சவடாலுக்கும் ஆளானது யாரால்? எதற்காக? என்ற கேள்விக்குள் போனால், மண்ணை வாரி இறைக்க நேரிடும். விட்டுத் தள்ளுங்கள்.

சினிமாவை குடும்ப சித்திரமாகவும், சமூகத்திற்கு தேவையான பொழுதுபோக்காகவும் வெற்றிலை மடிப்பது போல அழகாக மடித்துக் கொடுத்து வந்த சேரன், மீண்டும் எழுந்துவிட்டார். நடுவில் சுமார் பத்தாண்டு காலம் அவரை பந்தாடிவிட்டது சினிமாவும் அதன் வியாபாரமும்.

‘இந்த பத்து வருஷத்தையும் நான் என்னுடைய அனுபவமாதான் எடுத்துகிட்டேன். நிறைய பணத்தை கொடுத்த இறைவன் பைசா இல்லாமல் பிடுங்கிய காலத்தையும் பார்த்துவிட்டேன். கண்ணீர், சந்தோஷம், வலி, துன்பம், புகழ் எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டேன். போன் அடித்தால் எடுத்துப் பேச் கூட ஆளில்லை. ஆனால் நான் கடந்து வந்த பாதையை என் படங்கள் மீண்டும் காப்பாற்றி கொடுத்திருக்கிறது’ என்று நெகிழ்ந்தார் சேரன்.

‘திருமணம்’ சில திருத்தங்களுடன், என்ற தலைப்பில் அவர் இயக்கியிருக்கிற புதுப்படம், காலத்திற்கேற்ப சேரனை புதுசாகவும் அதே நேரத்தில் அவரது முந்தையை பொலிவு குறையாமலும் உருவாகியிருக்கிறது. சேரனின் படங்களால் ஈர்க்கப்பட்ட வெளிநாட்டு வாழ் தமிழர் ஒருவர், சுமார் ஐந்து கோடி செலவில் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். அது மட்டுமல்ல, சி2எச் மூலம் சேரன் பட்ட கடன்களையும் அடைத்து அவரை கவலைகளில் இருந்து மீட்டுவிட்டார்.

அடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் ஒன்றையும் சேரன் இயக்கப் போகிறார். ‘நான் ஒண்ணுமே இல்லாமல் வீட்ல உட்கார்ந்திருக்கும் போது என்னை தேடி நான்கு முறை வீட்டுக்கே வந்து பார்த்தவர் விஜய் சேதுபதி(சார்)’ என்று மனம் குளிர்ந்தார்.

மீண்டும் சேரனின் பொற்காலம் தமிழ்சினிமாவை ஆளட்டும். அப்போதாவது ‘ஜங் ஃபுட்’டில் பசியாறிக் கொண்டிருக்கும் ரசிகனின் ரசனை மாறுகிறதா பார்க்கலாம்!

1 Comment
  1. Krishnan says

    சேரன் நல்ல படங்கள் கொடுத்தவர் தான். ஆனா இப்பத்த ட்ரெண்டுக்கு அவர் ரொம்ப தூரம். திருமணம் படம் first லுக் பாத்தா, நல்லா ஊத்திக்க போற படம்ன்னு தெளிவா தெரியுது. எனக்கென்னவோ, NRI producer செமை முட்டாள் கூமுட்டை மாட்டிருக்கான். கொறைஞ்சது மூணு கோடி பிரோடுசேர்க்கு லாஸ் வரும். இல்ல முட்டாள் டிஸ்ட்ரிபியூட்டர் எவனாவது மாட்டுனா தான் உண்டு. திருமணம் பிளாப் ஆனதற்கப்புறமும், சேது சேரனுடன் படம் பண்ணுவாரா? சந்தேகமே

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பணத்தை அள்ளித்தரும் மை கர்மா!

Close