டைரக்டரை கதற விட்ட சினிமா சங்க நிர்வாகிகள்! அழ வைக்கும் ஆடியோ பதிவு
இந்த வாரம் சுமார் ஏழு படங்கள் திரைக்கு வந்திருக்கின்றன. இந்த ஏழு பட தயாரிப்பாளர்களுமே கடும் போராட்டத்திற்கும் கண்ணீருக்கும் இடையில்தான் தங்கள் படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இதில் கவுதம் கார்த்தி நடித்த ‘இவன் தந்திரன்’ படமும் ஒன்று. என்ஜினியரிங் மாணவர்களின் நிலைமையை படு கமர்ஷியலாகவும் அழுத்தமாகவும் வருத்தமாகவும் பேசிய இப்படம், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருப்பதால் தியேட்டர்களில் ஏகோபித்த வரவேற்பு மற்றும் அப்ளாஸ்கள் குவிகிறது.
இந்த நேரத்தில் குரல்வளையை நெரிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறது திரையரங்க சங்கங்கள். திடீரென எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் ஜி.எஸ்.டி வரிக்கு எதிராக வரும் திங்கட் கிழமையிலிருந்து காலவரையற்ற கதவடைப்பு என்று அறிவித்துவிட்டார்கள். படம் ரிலீஸ் ஆகி இரண்டே நாட்கள் ஆன நிலையில் ஊரெல்லாம் வட்டிக்கு வாங்கி படம் எடுத்தவர்களின் கதி பற்றி சிறிதும் யோசிக்காத இந்த சங்கங்களின் தலைவர்களான அபிராமி ராமநாதன், திருப்பூர் சுப்ரமணியம் இருவரின் முடிவால் சிலர் தற்கொலைக்கு தள்ளப்படும் நிலைமை.
கிட்டதட்ட 58 பர்சென்ட் டாக்ஸ் போட்டா நாங்க எப்படி பிழைக்கறது என்று தியேட்டர்காரர்கள் கேட்பதில் தவறே இல்லை. இதே பிரச்சனையை வலியுறுத்தி கடந்த மாதம் ஸ்டிரைக்குக்கு விஷால் தயாரானபோது அதை முறியடித்தவர்கள்தான் இவர்கள். இப்போது செய்யவிருக்கும் இந்த ஸ்டிரைக்கை அப்போதே செய்திருந்தால் அரசின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பிய மாதிரியும் இருந்திருக்கும். வேறு பட தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படாத விதத்திலும் அந்த கதவடைப்பை முறை படுத்தியிருப்பார்கள். இப்போதும் கெட்டுப் போகவில்லை. இந்த ஸ்டிரைக்கை இன்னும் ஒரு வாரம் கழித்தாவது வைத்துக் கொள்ளலாம். இப்படி திடுதிப்பென்று முடிவெடுப்பது எந்த விதத்திலும் சரியானதல்ல.
இப்படி ரயிலில் முண்டியடித்துக் கொண்டு ஏறி படியில் கால் வைத்தவர்களை இழுத்துத்தள்ளும் கேவலமான செயலை செய்த இவ்விருவரையும் சினிமா மன்னிக்கவே மன்னிக்காது.
‘இவன் தந்திரன்’ படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான ஆர் கண்ணனின் ஆடியோ பதிவை கேளுங்கள். நடந்த கொடூரம் உங்களுக்கு புரியும்.
R Kannan Speech