வச்சா குடுமி! சிரைச்சா மொட்டை!!
இது எச்சரிக்கையா, வேண்டுகோளா, கெஞ்சலா? தெரியாது. ஆனால் ‘இருட்டறையில் முரட்டுக்குத்து’ பட இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் கேட்ட விஷயம், ரசிகர்கள் அத்தனை பேரும் தங்கள் மனங்களில் போட்டு மாவாட்ட வேண்டிய விஷயம்.
இவர் இயக்கத்தில் முன்பு வெளிவந்த முரட்டுக்குத்து இன்டஸ்ட்ரியின் வியாபார ஏரியாவை நிம்மதி பெருமூச்சு விட வைத்தது தனிக் கதை. ரொம்ப நாள் கழிச்சு தியேட்டர்ல கூட்டமா கூட்டமா இளசுகளை பார்க்க முடிந்ததாக தியேட்டர்காரர்கள் சந்தோஷப்பட்டார்கள். கலாச்சார கேடு, அழிவின் சாவி, கேடுகெட்ட தொழில் என்றெல்லாம் ஒருபுறம் விமர்சனம் வந்தாலும், இந்த கலெக்ஷனும் கலகலப்பும் வரலாற்றிலிருந்து அழிக்க முடியாதவை.
இதே படத்தை பகலில் எடுத்துக் கொண்டே, இரவில் ப்யூர் யூ சர்டிபிகேட் படம் ஒன்றையும் எடுத்திருக்கிறார் சந்தோஷ். பி.ஜெயக்குமார். அதுதான் கஜினிகாந்த். ஒரு படத்தை பகலிலும் அதற்கு துளியும் சம்பந்தமில்லாத இன்னொரு படத்தை இரவிலும் தொடர்ச்சியாக எடுப்பதென்பது அவ்வளவு சாதாரண விஷயமில்லை. அதுவும் 35 நாட்களுக்குள். இவ்வளவு திறமை கொண்ட இந்த இயக்குனர், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு எச்சரிக்கை விடுத்தார். வேறு யாருக்கு? மக்களுக்குதான்.
“நான் ஒரு ஆபாசமில்லாத, ஜனரஞ்சமான, குடும்பத்தோடு பார்க்கிற படத்தை எடுத்திருக்கேன். இந்தப்படம் ஓடலேன்னா நான் மறுபடியும் ‘இருட்டறையில் முரட்டுக்குத்து’ மாதிரியான படங்களை இயக்கதான் போகணும். என் ரூட்டை முடிவு செய்ய வேண்டியது நீங்கதான்” என்றார்.
வச்சா குடுமி, சிரைச்சா மொட்டை என்பது இதுதான் போலிருக்கிறது.
ஆர்யாவும் சாயிஷாவும் ஜோடி போட்டு நடித்திருக்கும் இப்படத்தை இந்த ஒரு காரணத்திற்காகவே ஓட வைத்துவிடுங்க சாமீகளா. இல்லேன்னா, இந்தாளு மறுபடியும் சாக்கடை அள்ள கிளம்பிடுவார். நாத்தம் புடுங்கும்…