கஜினிகாந்த் / விமர்சனம்

ரஜினிகாந்த் தேறுவாரா என்று நாடே விவாதித்துக் கொண்டிருக்கும் போது, கஜினிகாந்த் தேறுவாரா என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம். ஏன்? இரத்தப் பொரியலிலிருந்து வத்தக்குழம்புக்கு மாறியிருக்கிறார் இப்படத்தின் டைரக்டர் சன்தோஷ் பி.ஜெயக்குமார். (ச-வுக்கு பக்கத்தில் வரும் ன்-ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்ல) இவரது அளவுகடந்த ஆபாசப்படங்கள் வசூல் பண்ணியதில் பாதியையாவது இப்படம் வசூல் பண்ணுமா? அந்தக் கவலை நமக்கெதற்கு? கஜினியை பொருத்தவரை கலகலப்பு!

ஞாபக மறதிக்காரர் ஆர்யா! அவருக்கு வீட்டில் பார்த்த பெண்தான் சாயிஷா. பெண் பார்க்க போவதற்கு முன்பே வருங்கால மாமனாரை பார்க்க டைம் கொடுக்கிறார் ஆர்யா. ஆனால் போனால்தானே? வழியில் ஒரு டைவர்ஷன். அவரை வரச்சொன்ன விஷயமே மறந்து போகிறது. அதற்கப்புறம் மீண்டும் மீண்டும் சந்திக்க நினைக்கும் மாமனாருக்கு ஆர்யாவின் ஞாபக மறதியே சகுனப் பூனையாக குறுக்கே வர, “என் பொண்ணுக்கு இந்த மண்ணு வேணவே வேணாம்” என்ற முடிவுக்கு வருகிறார் அவர். ஆனால் ஐயகோ… இந்த ஆர்யாவுக்கும் அந்த சாயிஷாவுக்கும் வேறொரு இடத்தில் காதல் பற்றிக் கொள்ள, நாம் வெறுப்பேற்றிய நபரின் மகள்தான் சாயிஷா என்பதே தெரியாமல் காதலிக்கிறார் ஆர்யா. பின்னர் நிஜம் தெரியவர… காதல் கை கூடியதா? என்பதுதான் ட்விஸ்ட்.

அடித்து துவைத்து உப்பு கண்டம் போட்டால் கூட ஆர்யாவுக்கு நடிக்க வராது. ஆனால் அவர் வரும்போதெல்லாம் தியேட்டரே சிரிக்கிறது. எப்படி? எல்லாமே சுச்சுவேஷன் காமெடி. மறந்து போய் தன் பைக் சாவியையே பிச்சைக்காரனுக்குப் போட்டுவிட்டு, அவனுக்கு கியர் போடவும் சொல்லிக் கொடுக்கிற அந்த ஒரு காட்சி, துளியூண்டு சாம்பிள். தனியொரு ஆளாய் நின்று தவிக்கிற கஷ்டமெல்லாம் இவருக்கு இல்லை. ஒன்று கூடவே சதீஷ் இருக்கிறார். இல்லையென்றால் அப்பா நரேன் இருக்கிறார். எல்லாரும் சேர்ந்து அடிக்கும் லூட்டி இருக்கிறதே… நினைத்து நினைத்து ‘கெக்கேபிக்கே’ ஆகலாம்.

சதீஷை திரையில் பார்க்கும் போதெல்லாம், ‘சாவடிக்குறான்டா…’ என்று பொங்கிய ரசிகர்கள், தங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளலாம். இந்தப்படத்தில் அவரது காமெடி முதன் முறையாக ரசிக்க வைக்கிறது. (முதலும் கடைசியுமான்னு சொல்ல வச்சுராதீங்க தம்பி…இனிமேலாவது கொஞ்சம் ஸ்கிரிப்டுக்கு உழைங்க)

ஆச்சர்யம்… ஆனால் உண்மை. வில்லன் மற்றும் குணச்சித்திர நடிப்பில் பாஸ் மார்க் வாங்கிக் கொண்டிருந்த ஆடுகளம் நரேனும் காமெடி பண்ணுகிறார். அடடா… இவ்வளவு திறமையா சார் உங்களுக்கு? மகனின் அட்டூழியத்தை சகிக்க முடியாமல் அவருடன் சேர்ந்து சின்னாபின்னமாகிற காட்சிகள் வெடிச்சிரிப்பு.

சம்பளத்தோடு சேர்த்து சாயிஷாவின் ஜுஸ் செலவுக்கும் சில பல ஆயிரங்களையோ, லட்சங்களையோ ஒதுக்கலாம். அம்மாடி… கொஞ்சம் வெயிட் போட்டுக்கோங்க! இருந்தாலும் ‘எலும்பே கவர்ச்சி… யல்லோ கலர் குளிர்ச்சி’ என்று ரசிகனை மயங்க விடுகிறார். ஆமா… ஒருத்தன் வார்டு மாறி வந்து ரத்தம் கொடுத்ததற்கெல்லாமா அவன் மேல லவ் வரும்?

கண்டிப்பான மாமனார் சம்பத் வழக்கத்தை விட ஸ்பெஷல். அப்புறம் அந்த இன்ஸ்பெக்டர். ஹீரோவை தவிர யாரு காக்கி சட்டை போட்டாலும் வில்லன்தானே? ஃபார்முலாவுக்குள் அடங்கி, ஃபார்முலாவுக்குள் பொங்கி, ஃபார்முலாவுக்குள் அடி வாங்கி அடங்குகிறார்.

இசை, ஒளிப்பதிவு பற்றியெல்லாம் ஸ்பெஷலாக சொல்லும்படி ஒன்றுமில்லை.

18 முறை எழுந்து விழுறதெல்லாம் ஓல்டு ஸ்டைல். ஒரே தடவ… அந்த ஒரு தடவையிலேயே நின்று ஜெயிப்போம்ல? என்கிறான் இந்த கஜினி.

மற்றபடி, குஜிலிகாந்த் ஆக இருந்த இயக்குனர் ஒருவர், தானே திருந்தி கஜினிகாந்த் ஆனதற்கு ஒரு ஸ்பெஷல் அப்ளாஸ்!

-ஆர்.எஸ்.அந்தணன்

1 Comment
  1. Mohammed Meeran says

    இந்திய சினிமாவின் ஒரே சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் தான்.
    அதே போல அரசியலிலும், தமிழக மக்களின் ஆதரவுடன், தமிழ்நாட்டின் முதல்வர் ஆவது உறுதி.
    டேய். அந்ததனா…. காசு வாங்கி கொண்டு எழுதுவதை விட நீ பிச்சை எடுக்கலாம்ட ..
    நீ அடங்கு இல்லை உன்னை அடக்கி விடுவோம். ஜாக்கிரதை.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கமல்ட்ட பணம் போச்சுல்ல? திரும்ப வாங்குன மாதிரிதான்!

Close