அதுக்கு மேல இடமில்லை! அதிர வைத்த இளையராஜா!

ஆடுகளம் கிஷோரை வைத்துக் கொண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்காகவா படம் எடுக்க முடியும்? ஆக்ஷனில் மஞ்சக் குளித்திருக்கிறது களத்தூர் கிராமம் படம்! சரண் கே அத்வைதன் இயக்கத்தில் இளையராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தின் கதையே சற்று கரடு முரடாகதான் இருக்கிறது.
அடுப்புக் கரிக்காக விறகு வெட்டி பிழைக்கும் ஊர். அந்த ஊரில் எல்லாமுமாக இருக்கும் கிஷோர். போலீசே நுழையாத இந்த கிராமத்தில் போலீஸ் நுழைகிறது. ஏன்? போலீஸ் அந்த ஊரையும் கிஷோரையும் என்ன செய்தது? இதையெல்லாம் ரத்தம் தெறிக்க சொல்லியிருக்கிறாராம் டைரக்டர். அதே நேரத்தில், மனசை உலுக்கும் சென்ட்டிமென்ட் சீன்களும் நிறைய உள்ளதாக கூறுகிறார் சரண் கே அத்வைதன். முக்கியமான விஷயம். இந்தப்படத்தில் டபுள் ரோலில் நடித்திருக்கிறார் கிஷோர்.
கதையை எழுதி முடித்ததுமே இந்த கதைக்கு பொருத்தமான இசையமைப்பாளர் இளையராஜாதான் என்ற முடிவுக்கு வந்தாராம். அவரிடம் போய் கேட்டதற்கு, “முதல்ல படத்தை எடுத்துட்டு வந்துருங்க. பார்த்துட்டு சொல்றேன்” என்றாராம். சொன்ன மாதிரியே அவருக்கு படத்தை போட்டுக் காட்டினால், “எப்ப கம்போசிங் வச்சுக்கலாம்?” என்று உத்தரவாதமே கொடுத்துவிட்டார். மொத்தம் மூன்றே பாடல்கள்தான். அதுக்கு மேல படத்துல செருக எங்கேயும் இடமில்லை என்று கூறிவிட்டாராம் இளையராஜா. களத்தூர் கிராமம் அப்படியொரு டைட் பேக்கேஜ் படமாக உருவாகியிருக்கிறது.

