பாவம் இந்த பொண்ணு… என்ன பாடு பட்டுச்சோ?
‘மாமனாரின் இன்பவெறி’ படத்தை மறுபதிப்பு செய்து தமிழ்சினிமா உலகத்தையே கிடுகிடுக்க வைத்தவர் டைரக்டர் சாமி. ‘சிந்துசமவெளி’ திரைப்படமும், அதில் நடித்த அமலாபாலும் ஒரேயடியாக திரிந்து போகிற அளவுக்கு மக்களின் விமர்சனம் விமர்‘சினம்’ ஆனது. அதற்கப்புறம் அவர் வீட்டில் கற்களை எறிந்து அவரது காரையே உடைக்கிற அளவுக்கு காயப்பட்டு கிடந்தார்கள் தமிழ்சினிமாவின் வெறிபிடித்த ரசிகர்கள். இந்த படம் மட்டுமல்ல, ‘உயிர்’ படத்திலும் கூட அவர் தன்னை ‘அண்ணி’ய சக்தியாக காட்டிக் கொண்டு அலப்பறை செய்தார். இப்படி உறவுகளை ட்ரிப்பிள் எக்ஸ் லெவலில் சித்தரிக்கும் அவரை கண்டாலே அலற ஆரம்பித்தனர் தமிழ்சினிமா ஹீரோக்கள். யாரிடம் கால்ஷீட் கேட்டுப் போனாலும், ‘நான் நடிப்புக்கே முழுக்கு போட்டுட்டனே’ என்று பதிலளிக்கிற அளவுக்கு முன்னெச்சரிக்கை ஆனார்கள்.
இது ஒருபுறமிருக்க, தனது இயக்கத்தில் மிருகம் படத்தில் நடித்த நடிகை பத்மப்ரியாவை கன்னத்தில் அறைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் சாமி. அதற்கப்புறம் இரண்டாண்டுகள் அவருக்கு ரெட் கார்டு போட்டது திரையுலகம்.
அட ச்சீ… இனிமேல் ஒழுங்காக படம் எடுத்து நல்ல பெயர் வாங்காமல் ஓய்வதில்லை என்று சபதம் செய்த சாமி, ஊரிலிருக்கிற சாமியையெல்லாம் கும்பிட்டுவிட்டு தேர்ந்தெடுத்த கதைதான் ‘கங்காரு’. சற்று கோபக்காரர் என்று பெயரெடுத்திருந்த சாமி, இந்த படத்தின் ஹீரோயின்கள் பிரியங்கா, வர்ஷாவை என்ன பாடு படுத்தினாரோ என்றெல்லாம் அச்சம் எழுந்தது. நல்லவேளை… இந்த படத்தை பற்றி வரும் எல்லா தகவல்களும் பாசிட்டிவ்தான்.
படத்தின் ஹீரோயினிடம் மரியாதையாக நடந்து கொண்டார். படத்தையும் மிக மிக மரியாதையாக உருவாக்கியிருக்கிறார் என்கிறார்கள். தணிக்கை குழுவும் படத்திற்கு க்ளீன் யூ சர்டிபிகேட் கொடுத்துள்ளது.
சாமியை நல்ல ரூட்டுக்கு திருப்பிய அந்த தயாரிப்பாளரைதான் சாமியா கும்பிடணும் போல…!