‘முன்னோடி இயக்குநர்கள் கிருஷ்ணன்-பஞ்சு’ ஆவணப்பட வெளியீட்டு விழா!

இந்திய சினிமாவின் முன்னோடி இயக்குநர்களில் இணைபிரியாத இரட்டையர் கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோரை கௌரவிக்கும் பொருட்டுத் தயாரிக்கப்பட்ட ஆவணப்பட வெளியீட்டுவிழா.
சென்னை, 6 ஏப்ரல் 2017:
புகழ்பெற்ற இயக்குநர் இணையில் (கிருஷ்ணன்) பஞ்சு என்கிற எஸ்.பஞ்சாபகேசன் அவர்களது 33-வது நினைவு நாளையொட்டி, பஞ்சு சரோஜா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சினிமாவின் பல்வேறு பிரிவுகளின் கீழ் தேசிய விருது பெற்ற இயக்குநர் இணை ‘கிருஷ்ணன்-பஞ்சு’ குறித்த ஆவணப்படத்தை, இந்திய சினிமாவின் மரியாதைக்கு உரிய பிரபலங்களின் முன்னிலையில் புகழ்பெற்ற நடிகரும் ஓவியரும் சொற்பொழிவாளருமான திரு. சிவகுமார், நடிகர் திரு. சூர்யா ஆகியோர் இன்று வெளியிட்டனர். இந்த ஆவணப்படத்தை ‘புளூ ஓஷன் பிலிம் அண்டு டெலிவிஷன் அக்காடமி’யின் தலைவர் திரு. தனஞ்செயன் இயக்கியுள்ளார். இதற்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் சுதர்சன் சீனிவாசன். பாஃப்டா திரைப்படக்கல்லூரியின் ஒளிப்பதிவுத்துறை மாணவர்கள், இவருக்கு உதவியாளர்களாகச் செயல்பட்டுள்ளனர். இதன் படத்தொகுப்பைக் கையாண்டிருப்பவர் ஜே.எஸ்.விக்னேஷ். பஞ்சு அவர்களின் புதல்வர்கள் பிருத்விராஜ், சுபாஷ் சந்திரன், அபிமன்யு ஆகியோர் ‘பஞ்சு சரோஜா புரொடக்ஷன்ஸ்’ சார்பில் இந்த ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
இந்திய சினிமாவின் முன்னோடி இயக்குநர்களான கிருஷ்ணன்-பஞ்சு இணை, தமிழ் – தெலுங்கு – இந்தி – கன்னடம் ஆகிய மொழிகளில் திரைப்படங்களை இயக்கி வெற்றி பெற்றதன் மூலம், பிற தமிழ்த் திரைப்படப் படைப்பாளிகளும் அவர்களைப் பின்பற்ற வழியமைத்துக் கொடுத்தனர். திரு.கிருஷ்ணன் படத்தின் திரைக்கதையில் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்வார்; திரு.பஞ்சு படப்பிடிப்பு, படத்தொகுப்பு ஆகியவற்றை கவனித்துக்கொள்வார். மூன்று இந்திய மொழிகளில், நாற்பது ஆண்டு கால அளவுக்குள் ஐம்பத்தாறு திரைப்படங்களை இயக்கி சாதனை படைத்த இயக்குநர் இணை இவர்கள் மட்டுமே!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அறிமுகமான ‘சதிலீலாவதி’ (1936) படத்தின்போது தொடங்கிய இந்த (கிருஷ்ணன் பஞ்சு) கூட்டணி, 1952-இல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும் அறிமுகம் செய்தது. பின்னர் இந்த இரு திலகங்களுடனும் தொடர்ந்து பல படங்களில் பணியாற்றி, தமிழ்த் திரைப்பட இயக்குநர்களிலேயே எவரும் செய்யாத சாதனையைச் செய்தது. மேலும் எஸ்.எஸ்.ராஜேந்திரன், பானுமதி, சாரதா, எம்.என்.ராஜம், ஸ்ரீரஞ்சனி, மைனாவதி, ‘குலதெய்வம்’ ராஜகோபால், மு.க.முத்து உட்படத் திறமையான கலைஞர்கள் பலரை அறிமுகம் செய்தவர்களும் இவர்கள்தான். ‘ரத்தக்கண்ணீர்’ படம் மூலம் நடிகவேள் எம்.ஆர்.ராதாவை சினிமாவுக்கு மீண்டும் அழைத்துவந்ததும் இயக்குநர் இணைதான்!
கே.ஆர்.ராமசாமி தமிழ் சினிமாவில் கதாநாயகனாக உருவானதற்கும்… நகைச்சுவை நடிகர்களான கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நாகேஷ், ‘குலதெய்வம்’ ராஜகோபால், டி.ஆர்.ராமச்சந்திரன், ‘தேங்காய்’ சீனிவாசன் ஆகியோர் கதாநாயகர்களாகத் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கும் இந்த இயக்குநர் இணையே காரணகர்த்தாக்கள். ‘மார்க்கண்டேய’ நடிகர் சிவகுமார் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கியதும், திரையுலகில் வெற்றி பெற்றதும் இந்த இயக்குநர் இணையின் மூலமாகத்தான்.
அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, திருவாரூர் தங்கராசு ஆகியோர் திரைப்பட வசனகர்த்தாக்களாகப் புகழ்வெளிச்சம் பெற்றதும் இவர்களால்தான். ‘முரசொலி’ மாறன், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கவிஞர் வாலி ஆகியோரை திரைக்கதை வசனகர்த்தாக்களாக அறிமுகப்படுத்தியதும் இவர்கள்தான். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களாகப் புகழ்பெற்ற ஏ.பீம்சிங், எஸ்பி.முத்துராமன், ஆர்.விட்டல், பட்டு என்கிற பட்டாபிராமன், திருமலை மகாலிங்கம் ஆகியோரது வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தவர்களும் இவர்கள்தான். திரையுலகில் பின்னாளில் புகழ்பெற்ற கே.பாலசந்தர், ஜே.மகேந்திரன், ஆரூர்தாஸ் போன்றோருடனும் இந்த இயக்குநர் இணை பணியாற்றியுள்ளனர்.
கிருஷ்ணன்-பஞ்சு இருவரும் மொத்தம் இயக்கியுள்ள படங்கள்: 56. தமிழில் இவர்கள் இயக்கிய படங்களின் எண்ணிக்கை: 41. இந்தியில் 11 படங்களையும், தெலுங்கில் 3 படங்களையும், கன்னடத்தில் ஒரு படத்தையும் இயக்கியுள்ளனர். இத்துடன் ஆவணப்படங்கள் மற்றும் விளம்பரப் படங்கள் சிலவற்றையும் இயக்கியுள்ளனர். இவற்றில் இந்திப்படமான ‘பாபி’ 50 வாரங்கள் ஓடி மகத்தான வெற்றி பெற்றது. ‘பராசக்தி’ (தமிழ்), ‘லேத மனசுலு’ (தெலுங்கு), ‘தோ கலியான்’ (இந்தி) ஆகியவை 25 வாரங்கள் ஓடி வெள்ளிவிழா கொண்டாடின. மீதமுள்ளவற்றில் 21 படங்கள் நூறு நாட்கள் ஓடி வெற்றி பெற்றுள்ளன. 31 படங்கள் 50 முதல் 75 நாட்கள் வரை ஓடியுள்ளன. இந்த இருவரது 40 ஆண்டுகால இயக்குநர் பணியின் வெற்றிச் சாதனையின் சதவிகிதம், இவர்களின் சமகால இயக்குநர்களின் வெற்றி சதவிகிதத்தை விடப் பல மடங்கு அதிகம்!
தமிழ்நாட்டின் நான்கு முதல்வர்களான அறிஞர் அண்ணா (‘நல்லதம்பி’), மு.கருணாநிதி (‘பராசக்தி’, ‘பிள்ளையோ பிள்ளை’ உட்பட 3 படங்கள்), எம்.ஜி.ஆர். (‘பெற்றால்தான் பிள்ளையா’, ‘இதயவீணை’, ‘எங்கள் தங்கம்’), ஜெ.ஜெயலலிதா (‘எங்கள் தங்கம்’, ‘அனாதை ஆனந்தன்’, ‘அக்கா தம்முடு’) ஆகியோருடன் பணியாற்றியுள்ளனர்.
இவர்களின் ஐந்து படங்கள் ரூ ‘குலதெய்வம்’, ‘தெய்வப்பிறவி’, ‘அன்னை’, ‘சர்வர் சுந்தரம்’, ‘குழந்தையும் தெய்வமும்’ ஆகியவை தேசிய விருது பெற்றன. இரண்டு படங்கள்: ‘உயர்ந்த மனிதன்’, ‘எங்கள் தங்கம்’ ஆகியவை தமிழக அரசின் பரிசுகளையும் பெற்றுள்ளன.
